ஊருக்குள் காட்டு யானைகள் வருவதை முன்பே அறிய 12 இடங்களில் 'ஏஐ' கேமரா! யானை- மனித மோதலை தடுக்க ரூ.6 கோடியில் திட்டம்

கூடலுார்: 'கூடலுாரில், மனித- யானை மோதலை தடுக்கும் வகையில், 6 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு இம்மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில், தற்போது பலா பழம் சீசன் துவங்கியுள்ளது. உணவுக்காக இதனை தேடி, காட்டு யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.
விவசாய பயிர்கள் சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், காட்டு யானை தாக்கி, இம்மாதம் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, முதுமலை கும்கி யானைகள், இரவிலும் யானைகளை விரட்ட பயன்படுத்த வசதியான, 'நைட் விஷன்' தெர்மல்டிரோன் கேமரா பயன்படுத்தி, யானைகள் இருப்பிடத்தை கண்டுபிடித்து விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 6 கோடி ரூபாய் செலவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, பயன்படுத்துவதற்கான கருவிகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன.
இந்நிலையில், ஈரான்- இஸ்ரேலில் நடக்கும் போர் பதட்டம் காரணமாக, பிரான்சிலிருந்து, நுண்ணறிவு கேமராக்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், கேமரா இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இத்திட்டம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதமாகி உள்ளது. இம்மாதம் இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை கொண்டு வர வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''கூடலுாரில், யானை- மனித மோதலை நிரந்தரமாக தடுக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை முன்னெச்சரிக்கையாக அறிந்து, காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஊசிமலை பகுதியில் 'வயர்லெஸ் ரிப்பீட்டர்ஸ் சென்டர்; 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்துவதற்காக கோபுரம்; 35 இடங்களில் சோலார் மின்னொளியுடன் கூடிய கோபுரங்கள்,' ஆகியவை நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. சில காரணங்களால் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இவை இம்மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் மனித- யானை மோதல் முன்னெச்சரிக்கையாக தடுக்க முடியும்,'' என்றார்.
செயற்கை நுண்ணறிவு கேமரா, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழையக்கூடிய பகுதிகளில் கோபுரம் அமைத்து, நிரந்தரமாக வைக்கப்படும். இவை யானை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் நுழையும் போது, அதனை வீடியோவாக பதிவு செய்து, அதனை நேரடியாக, 'ரிப்பீட்டர்ஸ்' சென்டருக்கு அனுப்பும். அவை அனுப்பும் வீடியோவின் அடிப்படையில், அப்பகுதியில் பணியில் இருக்கும் வன ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைகள் ஊருக்குள் நுழையும் முன்பே தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். இந்த கேமராவில், 2 கி.மீ., துாரம் வரை, வனவிலங்குகளின் நடமாட்டத்தை வீடியோவாக பதிவு செய்ய முடியும்.
மேலும்
-
சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்; 20 பேர் பலி; 52 பேர் படுகாயம்!
-
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்; சீனாவை அழைக்கும் அமெரிக்கா
-
100 ஏரிகள் புனரமைப்பு; கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.111 கோடி ஒதுக்கீடு
-
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க பச்சமலை எஸ்டேட்டில் கூண்டு வைப்பு
-
பயிர் காப்பீடு செய்தும் இழப்பீடு கிடைக்கவில்லை! மக்காச்சோள விவசாயிகள் வேதனை
-
இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை