தாவர மையத்தில் பூத்து குலுங்கும் ஆர்கிட் பூக்கள் 75 லட்சம் ரூபாய் நிதியில் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

கூடலுார்: கூடலுாரில் சாலையோர மரங்களில், பல வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் ஆர்கிட் பூக்களை சுற்றுலா பயணிகள் வியந்து ரசித்து செல்கின்றனர்.

வீடுகள், தாவர மையங்களில் அழகுக்காக பலவண்ண மலர்களை வளர்த்து வருகின்றனர். இந்த செடிகளில் பூக்கும் பூக்கள், ஒரு சில நாட்களில் வாடி உதிர்ந்து விடும். ஆனால், மலை பிரதேசங்களில் ஈரமான மரங்கள், பாறைகள், நிலத்தில் வளரக்கூடிய ஆர்கிட் பூக்கள் இரண்டு வாரம் முதல் இரண்டு மாதம் வரை அழகு மாறாமல் காயாமல் காட்சி தரும். நீலகிரியில் இதுவரை, 120க்கும் மேற்பட்ட ஆர்கிட் மலர் செடிகள் கண்டறிப்பட்டுள்ளது.

இவற்றில் பல வகை ஆர்கிட் மலர்களை கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் பசுமை குடில் அமைத்து வளர்த்து வருகின்றனர். பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜீன்பூல் தாவர மையம், சாலை ஓரங்களில் உள்ள குறிப்பிட்ட சில மரங்களில், 'எரிடிஸ் கிரிஸ்பா' என்ற தாவர பெயர் கொண்ட ஆர்கிட் பூக்கள் கொத்து கொத்தாய் பூத்து குலுங்குகிறது. இதன் வடிவம் மற்றும் அழகு சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆர்கிட் பூக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான ஆர்கிட் செடிகள், ஜீன்பூல் தாவர மையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு நிதி, 75 லட்சம் ரூபாயில், தற்போது ஆர்கிட் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவை பயன்பாட்டுக்கு வரும்போது ஏராளமான ஆர்கிட் மலர்கள் ஒரே இடத்தில் பார்த்து ரசிக்க முடியும்,' என்றனர்.

Advertisement