கூடலுார் பஸ் ஸ்டாண்டில் போதிய வசதிகள் இல்லை பயணிகள் அதிருப்தி

கூடலுார்: கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போதிய இருக்கை வசதி இல்லாததால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அருகே, பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதன், முன்புறம் உள்ள வளாகம் முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு பிப்., மாதம் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பஸ் ஸ்டாண்ட் முன் வளாகத்தில் மழை நீர் குளம் போல தேங்குவதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனை, சீரமைக்க வலியுறுத்தி கடந்த, 31ம் தேதி சமூக ஆர்வலர்கள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரில், காகித கப்பல் விட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் மற்றும் கூட்டணி கட்சியினர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவரை சந்தித்து அதிகாரிகள், 'சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; பணிகள் துவங்கப்பட்டு, 15 நாட்கள் நிறைவுபெறும்,' என, உறுதி அளித்தனர். அதனை ஏற்று போராட்டத்தை அவர்கள் கைவிட்டார்.

இந்நிலையில், கடந்த, 12ம் தேதி, பஸ் ஸ்டாண்டில் சேதமடைந்த சில குழிகளில் ஜல்லி கற்கள் கொட்டி சமன்படுத்தினர். தொடர்ந்து, இதுவரை பணிகள் துவங்கவில்லை. இதனிடையே, பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்க, மிக குறைந்த அளவு இருக்கைகள் மட்டும் வைத்துள்ளனர். இதனால், குறிப்பாக முதியவர்கள், கை குழந்தையுடன் வரும் பெண்கள், நின்றுகொண்டு பஸ்சுக்கு எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை உள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பயணிகள் கூறுகையில், 'சேதமடைந்துள்ள பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை உடனடியாக சீரமைப்பதுடன், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தினுள் கூடுதல் இருக்கைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement