சூறை காற்றுடன் கன மழை பேனர் விழுந்து ஒருவர் காயம்

புதுச்சேரி : புதுச்சேரியில் சூறை காற்றுடன் பெய்த கனமழைக்கு சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து ஒருவர் காயமடைந்தார்.

புதுச்சேரியில் நேற்று இரவு 8:00 மணியளவில் சூறை காற்றுடன் கனமழை கொட்டியது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் திடீர் மழை காரணமாக கடைகளில் தஞ்சம் புகுந்தனர். கன மழை காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மரப்பாலம் சந்திப்பு பகுதியில் முன்னாள் கவுன்சிலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்கள் அடியோடுட சாய்ந்து அவ்வழியாக சென்ற சில வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இதில் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரத்ராஜ், 30, என்பவரது மீது பேனர் விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரது இருசக்கர வாகனம் சேதமடைந்தது.

பலத்த காயத்துடன் உயிர் தப்பிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த பேனர்களை அகற்றினர். மேலும் இ.சி.ஆரில், கொக்கு பார்க் அருகே மின் கம்பம் முறிந்து விழுந்தது.

Advertisement