காலாப்பட்டு சிறையில் சர்வதேச யோகா தின விழா

புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் உள்ளனர். இவர்களுக்கு தினமும் காலையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறைத்துறை ஐ.ஜி., ரவிதீப் சிங்சாகர் உத்தரவின் பேரில், சிறையில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கரன், டாக்டர் கிருஷ்ண வர்மா, துரோப் மற்றும் ஸ்ரீ அரவிந்த சொசைட்டியை சேர்ந்த சீனிவாசமூர்த்தி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் கிருஷ்ணவர்மா பேசுகையில்''யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மிக அம்சங்களை ஒருங்கிணைக்கும் ஒரு பயிற்சியாகும். ஒருவன் யோகா பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் மனம் தெளிவடைகிறது.

ஆதலால், குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் ஒழுக்கமாக இருக்கிறார்கள். எனவே, சிறைவாசிகள் தொடர்ந்து யோகாவை கற்பதன் மூலம் சமுதாயத்தில் நல்ல ஒரு மனிதராக மாறுவார்கள் என்று கூறினார்.''மேலும், துரோப் குழுவினரின் மைம் நிகழ்ச்சி மற்றும் சிறைவாசிகளின் யோகா நாட்டியமும் நடைபெற்றது. சிறப்பாக யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட சிறைவாசிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement