நமக்குள் எப்போதும் பேதங்கள் வேண்டாம்! ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்   பேச்சு

கோவை : '' இந்துக்களாகிய நமக்குள் எப்போதும் பேதங்கள் இருக்கக்கூடாது அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்று ஸ்ரீஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் பேசினார்.

கர்நாடக மாநிலம் ஹரிஹரபுரத்திலுள்ள ஸ்ரீ ஆதிசங்கராச்சார்ய சாரதா லட்சுமி நரசிம்ம பீடம், ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜென்மதின மஹோத்ஸவ விழா நிறைவு நாள்நிகழ்ச்சி ராம்நகர் அய்யப்பபூஜா சங்கத்தில் நடந்தது.

காலை சுவாமிகளின் சிறப்பு ஆஹ்னிகா தரிசனமும், லட்சுமி நரசிம்ம சகஸ்ரநாம பாராயணமும், சண்டிகா ஹோமமும், ஆயுஷ்ஹோமமும் பூர்ணாஹூதியும் நடந்தது.

இதை தொடர்ந்து, ஸ்ரீஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் பேசியதாவது:

தர்மத்தை காப்பது நம் அனைவரின் முதல் கடமை. கடவுள் வேறு தர்மம் வேறு அல்ல. நாம் அனைவரும் தர்மத்தை சரியாக கடைபிடித்தால் மட்டுமே எதிர்கால சந்ததியர் செழிப்பாக இருப்பர். தர்மத்தை காப்பதற்கான பணியை செயலில் காட்ட வேண்டும்.

'வசுதேவக குடும்பகம்' என்பதை நம் பாரதிய கலாச்சாரமும் சனாதன தர்மமும் சொல்கிறது.

உலகமே ஒரு குடும்பம் என்று பொருள். பாரதிய கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.

உலகிற்கு நம் பாரதிய கலாச்சாரம் வழிகாட்டுகிறது. வேற்றுமையில் ஒற்றுமையை காட்டுகிறது.

உண்மை ஒன்றே ஆனால் வழிகள் பல. இதை இந்து சமயத்தை தழுவி அனைத்து சமயங்களும் சொல்கிறது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பாரத கலாச்சாரம் உலகின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் அடிப்படையாகும். இது ஒரு கல்பவிருக்ஷமாகும்.

இதில் வைதீகம், சைவம், வைணவம், பவுத்தம், ஜைனம், சீக்கியம், ஸ்காந்தம், உள்ளிட்ட பல கிளைகள் உள்ளன. இதை நன்கு பேணி பாதுகாக்க வேண்டும்.

இந்துக்களாகிய நமக்குள் எப்போதும் பேதங்கள் இருக்கக்கூடாது அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் என்.வி.நாகசுப்ரமணியம், குமுதம் ராஜகோபாலன், காஞ்சிகாமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி ஸ்ரீ கல்யாணராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement