குடிக்க தண்ணீரில்லா பிரமாண்ட அரசு மருத்துவமனை; காசுக்கு வாங்க கடைகளை தேடி அலையும் மக்கள்

தரைத்தளத்தில் இதய நோயாளிகளுக்கான வார்டு, அடுத்தடுத்த தளங்களில் 22 அறுவை சிகிச்சை அரங்குகள், ஆறாவது தளத்தில் அதிநவீன 'ஹைபிரிட்' அறுவை சிகிச்சை அரங்கு களுடன் புதிய கட்டடம் இருந்தாலும் எந்த தளத்திலும், வார்டிலும் குடிநீர் வசதியில்லை.

இதயவார்டில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் எக்ஸ்ரே, டாப்ளர், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க மணிக்கணக்கில் உறவினர்களுடன் வரிசையில் காத்திருக்க வேண்டும்.

குடிநீர் பாட்டிலுடன் வராதவர்கள் தாகத்துடனேயே ஸ்கேன் எடுக்கும் வரை காத்திருக்கின்றனர். அடுத்தடுத்த தளங்களில் உள்நோயாளிகளுக்கும் அதே நிலைதான்.

குடிநீர் வேண்டும் என்றால் அவர்கள் பழைய மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷன், ஆடிட்டோரியம் பகுதி ஆர்.ஓ., யூனிட்டில் பிடிக்க வேண்டும். இரவில் பாதுகாப்பு தொடர்பாக மருத்துவமனையின் பல்வேறு வாசல்கள் மூடப்படுவதால், கடைகளை தேடுகின்றனர்.

எஸ்.எஸ்.பி.,யிலும் பிரச்னை



சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தின் 3 தளங்களில் சிறுநீரகம், குடல் இரைப்பை பிரிவு, நரம்பியல் மருத்துவம், அறுவை சிகிச்சை பிரிவுகள், பல் மருத்துவ அறுவை சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. தினமும் 350 உள்நோயாளிகள், 500 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.

சிறுநீரகப்பிரிவில் தினமும் 150 முதல் 200 நோயாளிகளுக்கு 'டயாலிசிஸ்' செய்ய வேண்டும் என்பதால் அதற்கு மட்டும் ஆர்.ஓ., பிளான்ட்கள் மூலம் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இந்த தண்ணீர், தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு ஆர்.ஓ., பிளான்ட்கள் மூலம் சுத்திகரித்து, தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் லிட்டர் வரை கழிப்பறை தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

மூன்று தளங்களிலும் சிறிய அளவில் வைத்திருந்த ஆர்.ஓ., யூனிட்கள் 24 மணி நேரமும் இயங்கியதால் பழுதடைந்தன.

உள்நோயாளிகள் வார்டில் இருக்கும் வரை தினமும் வீட்டில் இருந்தோ அல்லது கடையில் பணம் கொடுத்தோ குடிநீர் வாங்கும் கட்டாயம் ஏற்படுகிறது.

நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், 'தனியார் மருத்துவமனை போல அரசு மருத்துவமனை, இருக்கை வசதி, சிகிச்சை எல்லாமே நன்றாக உள்ளது. அத்தியாவசியமான குடிநீர் வசதியில்லை. கழிப்பறைகள் சுகாதாரமானதாக இல்லை' என்றனர்.

Advertisement