முத்தான முத்தல்லவோ! முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையில் மாநில மூன்றாமிடம்

திருப்பூர்; 2025 - 26ம் கல்வியாண்டுக்கு, அரசு பள்ளி களில், 1ம் வகுப்பில் அதிக மாணவ, மாணவிகள் இணைந்ததால், அட்மிஷனில் மாநிலத்தில் மூன்றாமிடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.அரசு பள்ளியில் 2025 - 26ம் கல்வியாண்டுக்கான அட்மிஷன் மார்ச், 1ல் துவங்கியது.

முதல் ஐந்து நாளில் ஆயிரம் பேர் அரசுப் பள்ளிகளில் இணைந்தனர். மே மாதம் பள்ளிகள் கோடை விடுமுறை விட்ட பின்னும், அட்மிஷன் தொடர்ந்தது. கடந்த, 1ம் தேதி முதல், நேற்று வரை, மொத்தம், 9,491 பேர் அரசு பள்ளியில் இணைந்துள்ளனர்.

முதல் வகுப்பில் மட்டும் தமிழ் வழியில், 3,582 பேர், ஆங்கில வழியில், 2,225 பேர் என 5,807 பேர் இணைந்ததால், அரசு பள்ளி அட்மிஷனில் மாநிலத்தில் மூன்றாமிடத்தை திருப்பூர் பெற்றுள்ளது; முதல் இரு இடங்களில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்ளது.

எந்தெந்த வகுப்பில்எவ்வளவு பேர்?



மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மொத்தம், 9,491 மாணவ, மாணவிகள் இணைந்துள்ளனர். அதிக பட்சமாக, ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழியில், 3,582, ஆங்கில வழியில், 2,225 பேர் சேர்ந்துள்ளனர்.

எல்.கே.ஜி., - 362, யு.கே.ஜி., - 245, இரண்டாம் வகுப்பு - 582, மூன்றாம் வகுப்பு - 534, நான்காம் வகுப்பு - 511, ஐந்தாம் வகுப்பு - 482, ஆறாம் வகுப்பு - 717, ஏழாம் வகுப்பு - 149 மற்றும், எட்டாம் வகுப்பு - 102 பேர் என, 9,491 பேர் இணைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) பழனி கூறுகையில், ''அட்மிஷன் துவங்கிய முதல் ஐந்து நாளில் ஆயிரம் பேருக்கு அட்மிஷன் ஆனதால், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பாராட்டு கடிதம் அனுப்பினார்.

துவக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர், ஆசிரியர்களும் பொறுப்புணர்ந்து பணியாற்றினர். கடந்த, 2024 ஜூன் மூன்றாவது வாரத்தில் மாணவர் சேர்க்கை, 8,974 ஆக இருந்தது. நடப்பாண்டு, 9,491 ஆக உயர்ந்துள்ளது,'' என்றார்.

Advertisement