இஸ்ரேல் - ஈரான் போரில் தலையிட்டதால் அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சிக்கல்

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட்டின் அனுமதியின்றி ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டதால், அதிபருக்கான ராணுவ அதிகாரங்களை குறைக்கும் தீர்மானத்தை எதிர்க்கட்சி எம்.பி., கொண்டு வந்துள்ளார்.


மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் அமெரிக்கா நேற்று முன்தினம் தலையிட்டது.



இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி வளாகங்களை அமெரிக்க விமானப் படை மற்றும் கடற்படை தாக்கியது. இதற்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் அமெரிக்கா செலவிட்டுள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கைக்காக அதிபர் டிரம்புக்கு உள்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள், 'அதிபர் டிரம்ப் தேவையின்றி ஈரான் போரில் அமெரிக்காவை ஈடுபடுத்தியுள்ளார். இப்படிப்பட்ட சூழலுக்கு அமெரிக்காவை தன்னிச்சையாக தள்ளக்கூடாது. டிரம்பின் இந்த முடிவு ஆபத்தானது' என குற்றம்சாட்டிஉள்ளனர்.



ஜனநாயக கட்சி எம்.பி., ரோ கன்னா, அதிபரின் ராணுவ அதிகாரத்தை குறைக்க, போர் அதிகார சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். இதற்காக கட்சி எம்.பி.,க்கள் அனைவரின் ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார்.


அமெரிக்காவில் போர் அதிகார சட்டம் 1973ல் அமலுக்கு வந்தது. இதன்படி எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்கும் பார்லிமென்ட்டின் ஒப்புதல் தேவை.


அப்படி அனுமதியின்றி அதிபர் செயல்பட்டால் 48 மணிநேரத்திற்குள், பார்லிமென்ட்டுக்கு அது
குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.


வியட்நாம் போரின் போது பார்லிமென்ட் அனுமதியின்றி 10,000க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை அப்போது அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன் அனுப்பினார். அது நீண்ட கால போருக்கு வழிவகுத்தது.

Advertisement