ஒரு போன் போதுமே....

* தெருநாய் தொல்லை



மதுரை சொக்கலிங்கநகர் 7வது தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்வோரை துரத்தி கடிப்பதால் குழந்தைகள் நடமாடவே அச்சப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.

- தினேஷ், சொக்கலிங்கநகர்.

* மெகா பள்ளம்



மதுரை அரசரடியில் இருந்து காளவாசல் நோக்கி செல்லும் வழியில் சிக்னல் அருகே மெகா பள்ளம் உள்ளது. விரைவாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. 'ரோடு ஷோ'வுக்காக அவசர கதியில் அமைத்த ரோடுகள் பெயர்ந்துள்ளன. அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

- குரு, காளவாசல்.

* ஆக்கிரமிப்பில் பஸ்ஸ்டாப்



கீழையூரில் எம்.பி., நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய பஸ் ஸ்டாப் தனி நபரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மணவாளன், மேலுார்.

* பாலத்தில் விரிசல்கள்



சோழவந்தான் தென்கரை பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள், விரிசல்கள் காணப்படுகின்றன. பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுகின்றனர். அதிகாரிகள் சரி செய்து பாலத்தின் உறுதியை பரிசோதிக்க வேண்டும்.

- கவுரிநாதன், சோழவந்தான்

* மைதானமின்றி தவிப்பு



வண்டியூர் அரசுப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானம் இல்லாததால் முட்புதர் அருகில் விளையாடுகின்றனர். பாம்பு உள்பட விஷப்பூச்சிகளால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விஷ்ணு, வண்டியூர்.

* தெருவிளக்கை திருப்புங்க



ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில், பஸ் வெளியேறும் பகுதியின் இடதுபுறம் மின்கம்பம் உள்ளது. அதில் உள்ள விளக்கு மேற்கு நோக்கி திரும்பியுள்ளது. இதனால் போதிய வெளிச்சம் இல்லை. கிழக்கு பக்கமாக திருப்பினால் பயணிகள் பயன்பெறுவர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிஷோர், ஆரப்பாளையம்.

* நிரம்பி வழியும் சாக்கடை



மதுரை சொக்கலிங்கநகர் 7வது தெருவின் இறுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் நிரம்பி வழிகிறது. துர்நாற்றமெடுப்பதால் வயதானோர் மூச்சுத் திணறலால் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் சாக்கடை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராகுல், சம்மட்டிபுரம்.

Advertisement