காரியம் தவறானால் கண்களில் நீராகி... குறைகள் களைய மனுக்களை குவித்த மக்கள்

திருப்பூர்; கண்ணீர்மல்க தங்கள் குறைகளை கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்ட மக்கள், குறைகள் நிறைகளாகும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மொத்தம் 578 மனுக்கள் பெறப்பட்டன.விரைந்து தீர்வுகாண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலங்கள் மீட்க வேண்டும்



ஆக்கிரமிப்பிலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, உரிய பயனாளிகளுக்கு, விவசாய பயன்பாட்டுக்கு வழங்க கோரி, சமூக நீதிக்கட்சியினர் மனு அளித்தனர்.

டூவீலர் ஸ்டாண்டில் கூடுதல் வசூல்



சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை:

பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள டூவீலர் ஸ்டாண்ட், பொது ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால், நகராட்சிக்கு, மக்கள் வரிப்பணம் வீணாகிக்கொண்டிருக்கிறது. கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதற்கு, நகராட்சி முன்னாள் கமிஷனர் அளித்தபதில் கடிதம் உண்மைக்கு புறம்பானதாக உள்ளது. தற்போது முறைகேடாக ஏலம் எடுத்து, டூவீலருக்கு நாளொன்றுக்கு 12 ரூபாய்க்கு பதிலாக, 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கலெக்டர் விசாரணை நடத்தி, ஒப்பந்த உரிமையை ரத்து செய்யவேண்டும்.

ஒதுக்கப்பட்ட நிலத்தில் பட்டா வழங்குங்கள்



அவிநாசி தாலுகா, வள்ளிபுரம் பகுதி மக்கள்:

வள்ளிபுரம் கிராமத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். கடந்த 2008ல், எங்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலத்தையோ, பட்டாவையோ எங்களுக்கு காட்டவில்லை.

எங்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்த இடத்தை, தற்போது, வேறு நபர்களுக்கு வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை எங்களுக்கே வழங்கவேண்டும்; அந்த இடத்துக்கு மீண்டும் பட்டாவழங்க வேண்டும்.

கல் குவாரி மீது நடவடிக்கை தேவை



கோடங்கிபாளையம் பகுதி விவசாயிகள்:

பல்லடம் அருகே, கோடங்கிபாளையத்தில், 300 மீ., துாரத்துக்குள் குடியிருப்புகள் இல்லை என போலி ஆவணம் அளித்து, கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில், நாணல் வெடிக்கு பதிலாக, சட்ட விரோதமாக, அதிக திறனுள்ள வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஜூன் 8ம் தேதி, இந்த குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில், உயிரிழப்பு ஏற்பட்டது.

குவாரிக்கு வெடி வைக்கும்போது, கற்கள், அருகாமையிலுள்ள குடியிருப்புகளில் விழுகின்றன. உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள கல்குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்; அந்த குவாரி உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement