பிறந்த நாளில் எலக்ட்ரீஷியன் பலி கோவிலுக்கு சென்றபோது விபத்து

எலச்சிபாளையம், ராசிபுரம் அருகே, பிறந்த நாளில் கோவிலுக்கு குடும்பத்துடன் டூவீலரில் சென்றபோது, ஆம்னி வேன் மோதியதில், எலக்ட்ரீஷியன் பலியானார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, குருசாமிபாளையம், வடமாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 25; எலக்ட்ரீஷியன். மனைவி ஸ்வேதா, 22; தம்பதியருக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஹரிகிருஷ்ணனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், மனைவி மற்றும் மகனுடன், 'யமாஹா எப்.இசட்' பைக்கில், குருசாமிபாளையத்திலிருந்து காளிப்பட்டி கந்தசுவாமி கோவிலுக்கு சென்றார். சுண்டாங்கிபாளையம் பிரிவு சாலை அருகே, காலை, 10:30 மணியளவில் சென்றபோது, எதிரே மல்லசமுத்திரத்தில் இருந்து வையப்பமலை நோக்கி வந்த, 'மாருதி ஆம்னி' வேன் நேருக்குநேர் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணன், 'ஹெல்மெட்' அணியாததால் தலையில் அடிபட்டு பலியானார். ஸ்வேதாவுக்கு வலது காலில் பலத்த அடிப்பட்டது. குழந்தை பிரகதீஸ்வரன் லேசான காயமடைந்தான்.
அவ்வழியாக சென்றவர்கள், தாய், மகனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்னி வேன் ஓட்டி வந்த, மல்லசமுத்திரம் அருகேயுள்ள செம்பாம்பாளையத்தை சேர்ந்த கோழி வியாபாரி தமிழரசன், 46, சிராய்ப்பு காயமடைந்து, திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement