ஆசிரியர் வராததால் பூட்டப்பட்ட ஊ.ஒன்றிய துவக்கப்பள்ளி முதுவாக்குடி மலைக் கிராமத்தில் குழந்தைகள் கல்வி பாதிப்பு

போடி: போடி அருகே முதுவாக்குடி மலைக் கிராமத்தில் ஆசிரியர் வராததால் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த தொகுப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் சிரமம் அடைகின்றனர்.

தமிழகம், கேரளாவை இணைக்கும் வகையில் போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்டது முதுவாக்குடி மலைக்கிராமம். 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. காபி, ஏலம், மிளகு, பலா, எலுமிச்சை, இலவம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.

விவசாய தொழிலாளர்கள் உள்ள இப்பகுதி மக்கள் விளை பொருட்களை கொண்டு வரவும், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ வசதி பெற 4 கி.மீ., தூரம் உள்ள குரங்கணி அல்லது 20 கி.மீ., தூரம் உள்ள போடிக்கு வர வேண்டும்.

முதுவாக்குடியில் இருந்து குரங்கணி செல்லும் சாம்பலாறு வரை ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக உள்ளன.

விளை பொருட்களை தலைச் சுமையாகவும், குதிரைகள் மூலம் கொண்டு வருகின்றனர். நோய் பாதித்தால் சிகிச்சை பெற ' டோலி ' கட்டி தூக்கி வர சிரமம் அடைந்து வருகின்றனர்.

ரோடு, சுகாதார வளாக வசதி இன்றியும், சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்காததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து சிரமம் அடைகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

மழைநீர் வீடுகளுக்குள் புகும் நிலை



பரமசிவம், முதுவாக்குடி: இங்கு ஒரே சமூகத்தைச் சேர்ந்த முதுவார் இன மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றோம்.

அரசு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து 15 ஆண்டுகளுக்கு மேலானதால் பல வீடுகள் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.

மழைநீர் வீட்டிற்குள் கசிந்து வருவதால் குடியிருக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றோம். தெருக்களில் சில பகுதிகளில் சிமென்ட் ரோடு இன்றி குண்டும், குழியுமாக, பாறை கற்களாக உள்ளதால் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர்.

சிரமங்களை தவிர்க்க ஜீப், டூவீலரில் செல்லும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1.67 கோடி செலவில் 3 கி.மீ., தூரம் கல்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை விரைந்து முடிக்கவும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைத்து சிமென்ட் ரோடு வசதி அமைத்து தர வேண்டும்.

பூட்டிய துவக்கப்பள்ளி



முருகேஸ்வரி, முதுவாக்குடி: இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஆரம்பத்தில் ஆசிரியர்கள் வந்து பணி புரிந்தனர். 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். அதன் பின் எப்போதாவது மட்டுமே ஆசிரியர் வருகின்றனர். தற்போது ஆசிரியர்கள் வராததால் பூட்டியே உள்ளது.

இங்கு படித்த பெண் ஒருவரை வைத்து குழந்தைகளுக்கு பாடம் கற்றுத்தரும் நிலை உள்ளது.

இதனால் இங்கு உள்ள குழந்தைகளை 4 கி.மீ., தூரம் உள்ள குரங்கணியில் உள்ள விடுதியில் தங்க வைத்து அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம்.

சாக்கடை வசதியின்றி வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் வீடுகளுக்கு அருகேயும், மழை நீரால் பள்ளி கட்டடமும் சேதம் அடைந்து வருகின்றன. பெண்களுக்கான சுகாதார வளாக வசதி இன்றி சிரமம் அடைந்து வருகின்றோம்.

பூட்டிய பள்ளி மீண்டும் செயல்படவும், சாக்கடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement