அடிப்படை வசதியில்லா அமைதிச்சோலை

திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி 95வது வார்டின் ஒரு பகுதி அமைதிச்சோலை நகர். இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுகின்றனர்.
குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பாபு ராமச்சந்திரன், ரகுபதி, கணேசன், ராஜசேகர், சரவணகுமார், ஜெயக்குமார் கூறியதாவது: 2005ல் உருவான இப்பகுதியில் 13 தெருக்கள் உள்ளன. 2005ல் நான்கு தெருக்களில் மட்டும் தார் சாலை அமைக்கப்பட்டது. மற்ற இடங்களில் 20 ஆண்டுகளாக தார் சாலைகள் அமைக்கவில்லை.
ஏற்கனவே அமைத்த தார் சாலைகளை முறையாக பராமரிக்கவில்லை. எனவே சாலை குண்டும் குழியுமாக உள்ளன. முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்க தெருக்களில் தோண்டிய ரோடுகள் மேலும் சேதமடைந்து விட்டன. குழாய்களை சரியாக அமைக்காததால் குடிநீர் வீணாகிறது.
மாநகராட்சி குடிநீர் லாரியும் வருவதில்லை. இதனால் குடம் ஒன்றுக்கு ரூ. 15 கொடுத்து தனியார் லாரிகளில் குடிநீர் வாங்குகிறோம். பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் குழாய்கள் உடைந்து குடிநீர் ரோட்டில் தேங்கி மண் ரோடுகள் சேறும், சகதியுமாக உள்ளது.
பன்றிகள், தெருநாய்கள் அதிகளவில் திரிகின்றன. சிறுவர்கள் கொண்டு செல்லும் பொருள்களை பறிக்க நாய்கள் விரட்டுகின்றன. இதில் சிறுவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
பெரும்பாலான நேரம் குறைந்தளவு மின்சாரம் வருவதால் மாணவர்கள் படிக்க சிரமப்படுகின்றனர்.
ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ., சென்று திருநகரில் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. அங்கு எப்போது, என்ன பொருள்கள் வழங்குவர் எனத் தெரியவில்லை. எஸ்.ஆர்.வி. நகர், லயன்சிட்டி, சவுபாக்கியாநகர், இந்திரா நகர் பகுதியை மையமாகக் கொண்டு ரேஷன் கடை அமைக்க வேண்டும். குறைகள் பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை.
அமைதிச் சோலையில் அதைத்தவிர எல்லாம் இருக்கிறது. எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை என்றனர்.