முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை: நடத்தியது ஜப்பான் ராணுவம்

டோக்கியோ: ஜப்பான் ராணுவம், முதல் முறையாக இன்று உள் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாம் உலகப் போரில் தோல்வியுற்ற ஜப்பான், வெற்றி பெற்ற நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக நீண்டகாலமாக ராணுவ பலத்தை மேம்படுத்தவில்லை.
இந்நிலையில் அண்டை நாடுகளான சீனா மற்றும் வடகொரியாவுடன் அவ்வப்போது ஜப்பானுக்கு சிறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதை கருத்தில் கொண்டு ஜப்பான் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.

ஜப்பான், 2027க்குள் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பானின் வடக்கு பிரதான தீவான ஹொக்கைடோவில் உள்ள ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில், தரையிலிருந்து கப்பல் இலக்குகளைத் தாக்கும் குறுகிய தூர ஏவுகணையின் சோதனை இன்று நடத்தப்பட்டது.


வடகொரியா, சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் தனது ராணுவக் கட்டமைப்பை துரிதப்படுத்தி வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதன் பாதுகாப்பு கூட்டாளிகளின் பிரதேசங்கள் உட்பட, வெளிநாடுகளில் ஜப்பான், ஏற்கனவே ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

சீனா மற்றும் வடகொரியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் ராணுவ நவீனமயமாக்கலில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Advertisement