இஸ்ரேல் - ஈரான் மோதலால் 1 லட்சம் டன் பாசுமதி தேக்கம்

புதுடில்லி: இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக, இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய பாசுமதி அரிசி, துறைமுகங்களில் சிக்கியுள்ளதாக அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் சதீஷ் கோயல் தெரிவித்து உள்ளதாவது:

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலால், ஈரானுக்கு அனுப்பப்பட வேண்டிய 1 லட்சம் டன் பாசுமதி அரிசி, குஜராத்தில் உள்ள கண்ட்லா மற்றும் முந்த்ரா துறைமுகங்களில் தேக்கம் அடைந்துள்ளன. இந்தியாவின் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில், ஈரான் 18 முதல் 20 சதவீத பங்கு வகிக்கிறது.

போர் சூழலால், ஈரானுக்கு செல்லும் சரக்குகளுக்கு கப்பல்களோ அல்லது இழப்பீடோ கிடைக்கவில்லை. இழப்பீடு கிடைக்காததன் காரணமாக, ஏற்றுமதியாளர்கள் தங்கள் சரக்குகளை அனுப்ப முடியாமல் கவலையடைந்து வருகின்றனர்.

ஏற்கனவே, உள்நாட்டு சந்தையில் பாசுமதி அரிசி விலை கிலோ ஒன்றுக்கு 4 முதல் 5 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்நிலையில், ஏற்றுமதியில் ஏற்படும் தாமதம் மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவை, கடுமையான நிதி அழுத்தத்தை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான 'அபெடா' உடன் சங்கம் தொடர்பில் உள்ளது. மேலும், இந்த நெருக்கடி குறித்து விவாதிக்க வரும் 30ம் தேதி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் உடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.

Advertisement