மாட்டுப்பண்ணை உரிமையாளரிடம் ரூ.6.90 லட்சம் மோசடி செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, மாட்டுப்பண்ணை உரிமையாளரிடம் ரூ.6.90 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்றவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.


வேப்பனஹள்ளி அடுத்த ஆவகானப்பள்ளியை சேர்ந்தவர் யுவராஜ், 38, பி.இ., பட்டதாரி. திருமணமாகி ஒரு மகளுடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவர், ஆவகானப்பள்ளியில் 40 நாட்டு மாடுகளை வைத்து மாட்டுப்பண்ணை நடத்தி வந்துள்ளார். அதை அவரது சகோதரர் பராமரித்து வருகிறார். யுவராஜ் அவ்வப்போது மாட்டுப்பண்ணைக்கு வந்து செல்வது வழக்கம். அவரை கடந்த சில மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்டம், குன்னுாரை சேர்ந்த இதயகணேஷ், 35. என்ற புரோக்கர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அவரது மாடுகளை குந்தாரப்பள்ளி மாட்டு சந்தையில் அதிக விலைக்கு விற்று கொடுத்தால் கமிஷன் எவ்வளவு கொடுப்பீர்கள் எனக்கூறி பழக்கமாகி உள்ளார். அதற்கு யுவராஜூம் குறிப்பிட்ட தொகை தருவதாக கூறி நட்பாக பழகி வந்துள்ளார்.


பின்னர், யுவராஜை தொடர்பு கொண்ட இதயகணேஷ், மாட்டு வியாபாரம் மட்டும் செய்து லாபம் பார்த்தால் போதாது, பணம் இரட்டிப்பு செய்யும் ஒரு விபரம் தனக்கு தெரியும் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய யுவராஜ் அதற்கு சம்மதித்து உள்ளார். கடந்த, 21ல், ஆவகானப்பள்ளியில் உள்ள யுவராஜ் பண்ணை வீட்டிற்கு வந்த இதயகணேஷ் மற்றும் ஒரு நபர் இருவரும், யுவராஜிடம், 6.90 லட்சம் ரூபாய் அளவிலான, 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி உள்ளனர். அதற்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த, வெள்ளை தாள் பண்டல்களை கருப்பு டேப் போட்டு ஒட்டி அதில் கெமிக்கல்களை ஊற்றி ஒரு பக்கெட்டில் போட்டனர். அதற்கு மின் இணைப்பு கொடுக்க கூறிய அவர்கள், சிறிது நேரத்தில் கருப்பு பேப்பராக மாறும். கெமிக்கல் கலந்துள்ளதால், 8 மணி நேரம் கழித்து, 14 லட்சம் ரூபாய் அளவில், 500 ரூபாய் நோட்டுகளாக மாறி இருக்கும், என்றனர்.

இதை முற்றிலும் நம்பாத யுவராஜ், இதயகணேஷ் மற்றும் அவருடன் வந்த நபரை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். மது வாங்கி கொடுத்துள்ளார். இடையில் மொபைலில் பண்ணை வீட்டிற்கு தொடர்பு கொண்ட யுவராஜ், நோட்டுகள், பணமாக மாறிவிட்டதா என கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர், எல்லாம் கருகிவிட்டது என கூறியுள்ளார். இதையடுத்து, 'என் பணத்தை ஏமாற்ற பார்க்கிறீர்களா,' எனக்கேட்டு யுவராஜ் அவர்களை துரத்தியுள்ளார். அப்போது, இதயகணேசுடன் வந்தவர், சுதாரித்து தப்பி ஓடிவிட்டார். இதயகணேஷ், யுவராஜிடம் சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட அருகில் ரோந்து பணியில் இருந்த கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு அவர்களை மடக்கி பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்.


விசாரணையில், இதயகணேஷ் ஒரு, 500 ரூபாய் நோட்டில் 'டிஞ்சர்' எனப்படும் கருப்பு மை தடவி வைத்து, அதில், வெள்ளை நிற கெமிக்கலை ஊற்றி, கருப்பு பேப்பரை, 500 ரூபாயாக மாற்றியதாக நம்ப வைத்துள்ளார். இதை நம்பி, யுவராஜ் கொடுத்த, 6.90 லட்சம் ரூபாயை இரட்டிப்பாக்குவதாக கூறி வெள்ளை தாள் பண்டல்களை கொடுத்து தப்பிக்க முயன்றபோது போலீசாரிடம் பிடிபட்டது தெரிந்தது. மேலும் இவர் பல்வேறு பகுதிகளில் பணம் இரட்டிப்பு எனக்கூறி ஏமாற்றும் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. யுவராஜ் புகார்படி இதயகணேஷை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பணம் மற்றும் கெமிக்கல் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நபர் குறித்தும், யுவராஜூக்கும் இதில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.


தேன்கனிக்கோட்டையிலும் சம்பவம்

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவியலராக பணிபுரிந்த மாதம்மாள், 55, என்பவரிடம் இதேபாணியில், பணம் இரட்டிப்பு செய்வதாக கூறி, 40,000 ரூபாயை பெற்று ஏமாற்றிய ரவி, 65, அஞ்செட்டி நஞ்சுண்டன், 43, தேன்கனிக்கோட்டை முனிகிருஷ்ணன், 34, மூவரை கடந்த, 5ம் தேதி தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த பிரபு, 40 என்பவரை கடந்த, 8ம் தேதி போலீசார் கைது செய்தனர். தற்போது நடந்த சம்பவத்திற்கும் அந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா, இதில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement