சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் கைது

சண்டிகர் :வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும், அகாலி தள கட்சி மூத்த தலைவருமான விக்ரம் சிங் மஜிதியாவை, ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அமிர்தசரசில், அகாலி தள கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான விக்ரம் சிங் மஜிதியா வசித்து வருகிறார். இவர் மனைவி கணீவ் கவுர், அகாலி தள கட்சி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

போதைப் பொருள் வழக்கில் கடந்த 2021ல் விக்ரம் சிங் மஜிதியா கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இந்நிலையில், அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மஜிதியா வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 25 இடங்களில், ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முதல் சோதனை நடத்தினர்.

மஜிதியாவின் உறவினரான சிரோன்மணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நேற்று காலை நிறைவடைந்தது.

இதன் முடிவில், விக்ரம் சிங் மஜிதியாவை போலீசார் கைது செய்தனர்.முன்னதாக தன் சமூக வலைதளத்தில் மஜிதியா வெளியிட்டுள்ள பதிவு:

போதைப்பொருள் வழக்கில் எனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியாததால், பகவந்த் மான் அரசு பொய்யான வழக்கை தொடுக்க தயாராகி வருகிறது.

இந்த வழக்கில் முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நீங்கள் எத்தனை வழக்குகளை பதிவு செய்தாலும் நான் பயப்பட மாட்டேன். என் குரலை ஒடுக்க முடியாது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement