இசையால் வசமாகாத இதயம் எது?

இசை என்பது கேட்பவனின் உள்ளத்தைக் கையாண்டு அமைதியை பரப்பும் சக்தி கொண்டது. இது நம்மில் பலருக்கு தெரிந்த உண்மைதான். ஆனால், இந்த இசை மனஅழுத்தத்தால் தவிக்கும் விலங்குகளுக்கும் ஆறுதலாக இருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கே நேரடி பதில் அளிக்கும் முனைப்பாளர்தான் இசை அமைப்பாளர் யுவி அகர்வால்,வைல்டு ட்யூன்ஸ் என்ற நன்மை சார்ந்த திட்டத்தின் நிறுவனர்.
வீடு இழந்த விலங்குகளுக்கு இசை வழியாக நிம்மதி வழங்கும் நோக்குடன், யுவி ஆரம்பித்துள்ள இந்த இயக்கம், தற்போது அமெரிக்காவின் டென்பர் நகரத்தில் புகழ் பெறத் தொடங்கியுள்ளது. டென்பர் விலங்கு உறைவிடத்தில் அவர் கீபோர்டில் மென்மையான இசையை வாசிக்கத் தொடங்கியதும், அங்கிருந்த பல நாய்கள், பூனைகள் அமைதியாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன. சில நாய்கள் அருகில் வந்து அன்பாக தலையை மேசையில் வைத்து ஓய்வெடுத்தன.
இந்த அனுபவம் வெறும் நிகழ்ச்சி அல்ல - அது ஒரு உணர்ச்சிபூர்வமான உற்சாகமான காட்சிகளுக்கான சாட்சி.
வைல்டு ட்யூன்ஸ் என்பது விலங்கு நலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக முயற்சி. இது, விலங்கு உறைவிடங்களில் இருக்கும் விலங்குகளுக்கு நேரடி இசை நிகழ்ச்சிகளை வழங்குகிறது. யுவி, கீபோர்ட் அல்லது பிற மென்மையான இசைக் கருவிகளை வாசித்து, விலங்குகளுக்கு மன அமைதியை ஏற்படுத்த முயல்கிறார்.
"விலங்குகளும் உணர்ச்சி கொண்ட உயிர்கள். அவைகளும் பயம், சோகம், தவிப்பு போன்றவற்றை அனுபவிக்கின்றன.பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் விலங்குகளுக்கு நம்பிக்கை அளிக்க இசை ஒரு திறந்த வாசல் போல செயல்படுகிறது,"“நான் ஒரு இசைக்கலைஞன். ஆனால் அந்த இசை யாருக்காக என்ற கேள்விக்கு பதில் தேடி சென்றபோது, விலங்குகளுக்கும் அது தேவையென உணர்ந்தேன்,”
என்கிறார் யுவி அகர்வால்.
பல விலங்குகள் சாலைகளில் இருந்தோ அல்லது தவறான சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்டவையாக இருக்கின்றன. இவை புதிய இடத்திற்கு வரும்போது, இயற்கையற்ற சத்தங்கள், தனிமை, பழகாத சூழ்நிலை போன்றவை, அவற்றின் நலனில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.அதனை சமாளிக்க, மருந்து இல்லாமல் இயற்கையின் மொழியான இசையைச் சார்ந்த இந்த முயற்சி மிகவும் புதுமையானது.
இதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது,விலங்குகள் தளர்வை உணர்கின்றன,புதிய சூழ்நிலைக்கு விரைவாகச் ஒத்துழைக்க முடிகிறது, விலங்குகளின் உறைவிட பணியாளர்களுக்கும் வேலை செய்ய வசதியாகிறது,இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. யுவியின் நேரடி இசையின்போது விலங்குகள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும் காட்சிகள் பலருக்கும் கண்களில் நீர் வரவைக்கும் அளவிற்கு நெகிழ்வூட்டின.
இந்த திட்டத்தை தற்போது பிற நகரங்களிலும் விரிவுபடுத்த யுவி திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் பிற விலங்கு உறைவிடங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அத்துடன், இயற்கைச் சத்தங்கள், புல்வெளிச் சூழ்நிலை இசை, மென்மையான இசைத்திறன் பயிற்சி போன்ற கூடுதல் முயற்சிகளும் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.
இது ஒரு சாதாரண இசை நிகழ்ச்சி அல்ல. இது ஒவ்வொரு விலங்குக்கும் "நீங்கள் தனியாக இல்லை" என்று சொல்லும் அன்பின் மொழியாக இந்த இசை இருக்கிறது.
யுவி அகர்வால் மூலம் இசை இன்று விலங்குகளுக்கு மருந்தாக பாவிக்கப்படுகிறது. அவரது முயற்சி, உலகம் முழுவதும் விலங்கு நலத்தில் புதிய பாதையை உருவாக்கி வருகிறது.
-எல்.முருகராஜ்