பா.ம.க., எம்.எல்.ஏ., அருளின் கட்சி பதவி பறிப்பு; ஓயாத அன்புமணி - ராமதாஸ் மோதல்

சென்னை: பா.ம.க., எம்.எல்.ஏ., அருளை சேலம் மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
பா.ம.க.,வில் கடந்த சில நாட்களாக ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை பொறுப்பு தன்னிடம் இருப்பதை வெளிப்படுத்துவதற்காக, அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளை அன்புமணி நீக்குவதுமாக இருந்து வருகிறது.
அண்மையில், தன்னுடைய பலத்தை நிருபிப்பதற்காக, சேலம், தர்மபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகளின் பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நடத்தினார். ஆனால், அந்த சமயம் சேலம் மாநகர மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அருள், நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதனிடையே, மாவட்ட பொறுப்பு வகித்து வந்த எம்.எல்.ஏ., அருளுக்கு, பா.ம.க., மாநில இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் இன்று (ஜூன் 25) காலை அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், அருள் உடல்நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அன்புமணி கூறியதைக் கேட்டு ஆவேசப்பட்ட அவர், நான் என்ன செத்தா போயிட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பா.ம.க., சேலம் மாநகர மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ., அருளை நீக்கம் செய்து அன்புமணி உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சரவணன் நியமனம் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளராக எம்.எல்.ஏ., அருளை ராமதாஸ் இன்று காலை நியமித்த நிலையில், மாலையில் அவரை பதவியில் இருந்து அன்புமணி நீக்கியுள்ளார். இருவரிடையே அதிகார மோதல் தொடர்ந்து வருவது பா.ம.க., கட்சியினரிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸூக்கே அதிகாரம்
இதனிடையே, மாநில பொறுப்பை ராமதாஸ் அளித்த நிலையில், என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று எம்.எல்.ஏ., அருள் கூறியுள்ளார்.








