ஆன்லைனில் பகுதி நேர வேலை என நம்பி ஏமாந்துராதிங்க: ரூ.1 கோடி வரை இழந்த பட்டதாரிகள்

சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க இளைஞர்களும், பொது மக்களும் அலைபேசி, இணையத்தை பயன்படுத்தும் போது கவனமுடன் செயல்படுவது அவசியம். இணையத்தில், 'ஆன்லைன் டிரேடிங்', 'குறைந்த முதலீட்டில் அதிக லாபம்' என பல்வேறு இணையவழி மோசடிகள் நடந்து வருகின்றன. இதில் பட்டதாரிகள் அதிகளவில் ஏமாறுகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் பட்டதாரிகள் சுமார் ரூ.1 கோடி ரூபாய் வரை இந்த வகையான மோசடிகளில் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ''சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை மோசடி கும்பல் தொடர்பு கொள்கிறது. முதலில் இலவசமாக முயற்சி செய்து பார்க்கக் கூறுகின்றனர். அந்த வலையில் சிக்குபவர்களிடம் சில 'டாஸ்க்' வழங்குகின்றனர். அதில் வெற்றி பெற்றதாக கூறி, குறிப்பிட்ட தொகை வழங்குகின்றனர். பின் மேலும், 'பணம் சம்பாதிக்க கூடுதல் பணம் முதலீடு செய்ய வேண்டும்' என, கூறுகின்றனர்.

மீண்டும் 'டாஸ்க்'குகளை முடித்ததும் சிறிய தொகை வழங்குகின்றனர். சில நாட்களில், 'பணம் செலுத்தினால் மட்டுமே சம்பாதித்த தொகையை எடுக்க முடியும்' என, கூறுகின்றனர்.

இதனை நம்பி மேலும் பணத்தை செலுத்தி, பட்டதாரிகள் லட்சக்கணக்கில் ஏமாறுகின்றனர். பின் புகார் அளிப்பதற்கு தயங்கி, சம்பவம் நடந்த பல நாட்கள் கழிந்த பின் அவசர கதியில் புகார் அளிக்கின்றனர்.

இதனால் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வாட்ஸ் ஆப், டெலிகிராம் செயலிகள் மூலம் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து பகுதி நேர வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்து வேலை, ஆன்லைன் முதலீடு என குறுஞ்செய்திகள் வந்தால் அதனை தவிர்க்க வேண்டும்.

சைபர் குற்றம் தொடர்பான புகார்களை 1930 என்ற எண், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.'', என்றனர்.

Advertisement