ஒரு நாள் மலையேற்றத்துக்கு திம்மப்பன பெட்டா

பெங்களூரில் இருந்து 63 கி.மீ., தொலைவில் ராம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திம்மப்பன பெட்டா. மலையேற்றத்திற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது.
'இரட்டை பாறைகள்' உள்ள இந்த மலை மிகவும் பிரசித்தி பெற்றது. அதை சுற்றி உள்ள இயற்கை அழகை படம் பிடித்து, உங்களின் மொபைல் போனிலோ, லேப் டாப்பிலோ, 'டிபி'யிலோ கூட வைத்துக் கொள்ளலாம்.
இந்த மலைப்பகுதி, 2017க்கு பின்னரே பிரபலமடைய துவங்கியது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், பெங்களூரில் இருந்து பலரும் இங்கு மலையேற்றத்துக்கு வருகை தருகின்றனர். குறிப்பிட்ட துாரம் வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் மண் சாலை தான்.
மலையின் அடிவாரத்தில் கார்களுக்கு 50 ரூபாயும்; இரு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், அப்பகுதி மக்களே வசூலிக்கின்றனர். அங்கிருந்து 200 மீட்டர் நடந்து சென்றால், 'திம்மப்பன சுவாமி கோவிலை' சென்றடையலாம். கோவிலை சுற்றுப்புற கிராம மக்கள், நன்றாக பராமரித்து வருகின்றனர்.
கோவில் அருகிலேயே சிறிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றிலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைத்துள்ளனர்.
அங்கிருந்து வாகனத்தில் சிறிது துாரம் சென்றால், வாகன நிறுத்துமிடம் தென்படும். அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, நடந்து செல்லலாம்.
அங்கு மக்கள் ஓய்வெடுப்பதற்காக நிழல் கூடம் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து பார்த்தாலே, 'இரட்டை பாறை'கள் தென்படும்.
காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சென்று வரலாம். எனவே, வீட்டில் இருந்து காலை சிற்றுண்டி சாப்பிட்ட பின், நிதானமாக புறப்படலாம். இங்கு சாப்பிட எதுவும் கிடைக்காது.
எனவே, வீட்டில் இருந்து புறப்படும் முன்பே, உணவு, தின்பண்படங்கள், குடிநீர் எடுத்துக் கொள்ளலாம். வெயிலில் இருந்து தப்பிக்க கூலிங் கிளாஸ், தொப்பி, 'சன் ஸ்கிரீன்' இருந்தாலும் பயன்படுத்தலாம்.
இப்பகுதி சுத்தமாக இருப்பதால், மது குடிக்க அனுமதி இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு மலையேற தேவையில்லை. மேடான பகுதியில் ஏறுவது போன்று ஏறலாம். மலையின் மேல் பகுதியில் பாறையின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் இரு சக்கர வாகனத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தால், பாறையில் ஓட்டலாம். அதேவேளையில், மழைக் காலத்தில் இந்த 'சாகசத்தை' தவிர்ப்பது நல்லது.
பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், ராம்நகர் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து கூட்டகள் கிராமத்துக்கு பஸ் ஏற வேண்டும். கூட்டகள் கிராமத்துக்கு 1 கி.மீ., முன்னதாக இறங்கிக் கொள்ள வேண்டும். அங்கு இடதுபுறத்தில் மலைக்கு செல்லும் போர்டு தென்படும். அதன் வழியாக 1 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால், மலைக்கு செல்லும் பாதையின் நுழைவாயிலில் பெரிய வளைவு அமைக்கப்பட்டிருக்கும். அதன் வழியாக மலைக்கு செல்லலாம்.
- நமது நிருபர் -
மேலும்
-
267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் ஓராண்டாக திணறும் 'கஸ்டம்ஸ்'
-
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பில் ரூ.1.50 கோடி முறைகேடு
-
3,000 கார்களுடன் தீப்பிடித்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது
-
கோவில் விக்ரகங்களை மாற்றுவதில் பழைய முறை தொடர வலியுறுத்தல்
-
இடைநிற்றலை தடுக்கும் தொழிற்கல்வி; மூடுவிழா நடத்த அரசு திட்டமா?
-
மாம்பழ பிரச்னையை திசை திருப்ப முயற்சி; தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு