20 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் காலீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி

சீட்டணஞ்சேரி:சீட்டணஞ்சேரி, காலீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோவில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.

உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இந்த கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சிவகாம சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், 36 அடி உயரம் கொண்ட புதிய தேர் செய்யப்பட்டு, 82 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு தேரோட்டம் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய கோரிக்கை எழுந்தது.

இந்த கோவிலில், கடைசியாக 2005ல் குடமுழுக்கு நடந்ததது.

இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் காலீஸ்வரர், சிவகாம சுந்தரி, விநாயகர், முருகர் மற்றும் இதர சன்னிதிகளுக்கும், ராஜகோபுரம் போன்றவைக்கும் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.

அதை தொடர்ந்து, கோவில் கட்டடங்கள் பழுது பார்த்தல், கோவில் மூல ஸ்தானங்களில் உள்ள ஐந்து நிலை கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெறுகிறது.

Advertisement