காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே, களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ், 23, தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ, 21, ஆகியோர், காதல் திருமணம் செய்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க, 17 வயது சிறுவனான தனுஷின் தம்பி கடத்தப்பட்ட வழக்கில், 'சஸ்பெண்ட்' ஏ.டி.ஜி.பி., ஜெயராம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி ஆகியோரின் தொடர்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையில் விசாரணை நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார், சிறுவன் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் குறித்து, விசாரணை நடத்தி உள்ளனர்.
சிறுவன் கடத்தல் சம்பவத்தில் நடந்தது குறித்து, தனுஷ் தாய் லட்சுமி, காதல் ஜோடி மற்றும் களாம்பாக்கத்தை சேர்ந்த சிலரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்துள்ளனர்.