அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 18 லட்சம் மோசடி திண்டுக்கல் கல்லுாரி பேராசிரியை கைது

திண்டுக்கல்:கிளர்க் உள்ளிட்ட அரசு பணி வாங்கித்தருவதாக கூறி 12 பேரிடம் ரூ. 18 .50 லட்சம் மோசடி செய்த திண்டுக்கல் கல்லுாரி பேராசிரியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சியாமளாதேவி. கன்னிவாடி கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறைத்தலைவராக உள்ளார். பழைய வத்தலகுண்டை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் செல்வராஜிடம், 'தனக்கு அரசு துறைகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களை நன்கு தெரியும். யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால் வாங்கிவிடலாம். லேப் டெக்னீசியன் வேலைக்கு ரூ.5 லட்சம், கிளர்க், அலுவலக உதவியாளர் வேலைக்கு ரூ.3 லட்சம், கணினி உதவியாளர் பணியும் உள்ளது அதற்கும் பணம்கொடுத்தால் வாங்கிவிடலாம் 'எனக்கூறி உள்ளார்.வேலை வேண்டுவோர் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் உள்ளிட்டவைகளின் நகலுடன் முன்பணமாக 3 லட்சம் தரவேண்டும் என கூறி உள்ளார்.
செல்வராஜை நம்பவைப்பதற்காக வேறொருவருக்காக போலியாக தயார் செய்த அரசு பணி ஆணையை காட்டி உள்ளார். இதை நம்பிய செல்வராஜ் 12 பேரிடம் ரூ.18 .50 லட்சத்தை வாங்கி வங்கிக்கணக்கு மூலம் அனுப்பி உள்ளார். பணம் கொடுத்த ஒவ்வொருவரையும் வெவ்வேறு நாளில் தனித்தனியே அழைத்து அவர் பணிபுரியும் கலைக் கல்லுாரியில் வைத்து போலி நேர்காணலையும் நடத்தி உள்ளார்.ஆனால் யாருக்கும் அரசுப்பணி கிடைக்கவில்லை
இரண்டு ஆண்டாகியும் வேலை கிடைக்காததால் பேராசிரியையிடம் பணத்தை கேட்டுள்ளனர். சரியான பதில் அளிக்காமல் ஏமாற்றி வந்ததையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். எஸ்.பி., பிரதீப் உத்தரவையடுத்து சியாமளாதேவியை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கைது செய்தார்.