விளைச்சல் இருந்தும் வாழை இலைகளுக்கு...விலையில்லை: அறுவடையை தள்ளி வைக்கும் விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, ஓடைப்பட்டி, சின்னமனூர், கம்பம் உத்தமபாளையம் பகுதியில் 14 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி உள்ளது. இங்கு விளையும் வாழைக்காய்கள், இலைகள் சென்னை, மதுரை, மார்க்கெட் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கின்றன. முகூர்த்த மாதங்கள், விழா காலங்களில் வாழை இலைகளின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் விசேஷ நிகழ்ச்சிகள் குறைந்துள்ளதால் வாழை இலைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் தோட்டங்களில் அறுவடை செய்து கொண்டு வரும் வாழை இலைகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. சீசன் நாட்களில் ரூ.2000 முதல் 4000 வரை இருந்த வாழை இலை கட்டுகள் தற்போது ரூ.600 ஆக விலை குறைந்துள்ளது. விலை குறைவால் வாழைத்தோட்டங்களில் இலைகள் அறுப்பதை விவசாயிகள் தள்ளி போட்டுள்ளனர்.
இலை வியாபாரி ஆண்டிபட்டி ஜெயபால் கூறியதாவது:கற்பூரவள்ளி, சக்கை, நாடு ரக வாழைகளில் மட்டுமே இலைகளுக்கு பயன்படும்.ஆண்டிபட்டி பகுதியில் ஸ்ரீரங்கபுரம், தர்மத்துப்பட்டி, மூனாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை, அணைக்கரைப்பட்டி, குன்னூர், அரப்படித்தேவன்பட்டி உட்பட வைகை ஆற்றின் கரையோரங்களில் பல ஏக்கரில் சாகுபடி ஆகிறது. சின்னமனூர், கம்பம், ஓடைப்பட்டி பகுதிகளில் செவ்வாழை, நாழிப்பூவன், நேந்திரம் வகைகள் அதிகம் விளைகின்றன. பெரியகுளம் பகுதியில் கற்பூரவல்லி அதிகம் உள்ளது. இந்த ரகங்களில் இலைகள் பயன்பாடு இல்லை. ஆண்டிபட்டியில் இருந்து சீசன் காலங்களில் தினமும் 5 லோடுகள் வரை மதுரை, சென்னை மார்க்கெட் செல்லும். உசிலம்பட்டி, எழுமலை, கம்பம், தேனி பகுதிக்கும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது ஒன்று அல்லது இரண்டு லோடுகள் மட்டுமே சென்னை செல்கிறது. 36 முதல் 40 மடிகளுடன் பெரிய இலைகள் கொண்ட கட்டுகள் தற்போது ரூ.600 வரையும், சிறிய இலை கட்டுகள் ரூ.200 முதல் 300 விலையில் உள்ளது.
கூலி, போக்குவரத்து செலவை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இதனால் இலைகள் அறுப்பை தள்ளிப் போடுகின்றனர்.
முற்றிய இலைகளை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும் என்பதால் விவசாயிகளுக்கு இலைகள் அறுவடையை தள்ளிப்போட்டால் பாதிப்பு ஏற்படாது என்றார்.
மேலும்
-
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
-
என்.பி.டி.,யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து; எச்சரிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்
-
தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்
-
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி