சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கம்பம்: மேகமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் கன மழை காரணமாக, நேற்று காலை சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்குவது சுருளி அருவியாகும். இங்கு கோடையில் மட்டும் தண்ணீர் வரத்து இருக்காது. மற்ற நாட்களில் ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டும். அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக அருவி இருப்பதால், தண்ணீர் மூலிகை தன்மை நிறைந்ததாக உள்ளது. மாவட்டத்தின் சின்ன குற்றாலம் என்றழைக்கப்படும் இந்த அருவியில் குளிக்க தினமும் திரளாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நாட்களில் மட்டும் குளிக்க அனுமதி கிடைக்காது.

நேற்று முன்தினம் இரவு மேகமலை, இரவங்கலாறு, ஹைவேவிஸ், மணலாறு பகுதியில் பெய்த கன மழை காரணமாக, அருவியில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ரேஞ்சர் பிச்சை மணி தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தவுடன், குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

Advertisement