எஸ்சிஓ மாநாடு கூட்டறிக்கையில் ராஜ்நாத் கையெழுத்திடாதது சரி: ஜெய்சங்கர் உறுதி

2

புதுடில்லி: '' ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் கூட்டறிக்கையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திடாதது சரியானது'', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


சீனா தலைமையில் நடந்த எஸ்.சி.ஓ., அல்லது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா, அதன் முடிவில் வெளியிட இருந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டது.பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை பாதுகாக்க சீனா பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் எதிர்ப்பை பதிவு செய்தார்.



இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: முக்கியமான விஷயம் என்பதால், இது குறித்து சில விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவே எஸ்சிஓ அமைப்பு உருவாக்கப்பட்டது. அதுவே முதன்மையான கொள்கை.


பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நீங்கள் யூகிக்கக்கூடிய நாடு, பயங்கரவாதம் குறித்து குறிப்பிடுவதை ஏற்க மறுத்தது.


முக்கியமான குறிப்பு இல்லாத கூட்டு ஆவணத்தை ஆதரிக்க ராஜ்நாத் மறுத்தது சரியானது. ஒரு மித்த கருத்து அடிப்படையில் மட்டுமே எஸ்சிஓ செயல்படுகிறது. ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும், எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லாது. பயங்கரவாதம் குறித்து குறிப்பிடாவிட்டால், நாங்கள் ஆவணத்தில் கையெழுத்திட மாட்டோம் என ராஜ்நாத் தெளிவாக கூறியுள்ளார். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

Advertisement