வரமா வருவாரா வாஷிங்டன்: மாறுமா இந்திய பவுலிங் வியூகம்

பர்மிங்ஹாம்: ''பர்மிங்ஹாம் டெஸ்டில் குல்தீப்பிற்கு பதில் 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கலாம்,'' என தோடா கணேஷ் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ராகுல், ரிஷாப் (2) சதம் அடிக்க, இந்தியா 835 ரன் (471, 364) குவித்தது. பவுலர்கள் சொதப்பியதால், வெற்றியை கோட்டைவிட்டது.
எடுபடாத பந்துவீச்சு: இப்போட்டியின் கடைசி நாளில் 65-82வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது. 371 ரன்னை 'சேஸ்' செய்த இங்கிலாந்து அணி, 65வது ஓவரில் 286/4 ரன் எடுத்து தவித்தது. அப்போது வெற்றிக்கு 85 ரன் தேவைப்பட்டது. 15 ஓவர் கழித்து தான் புதிய பந்து எடுக்க முடியும். இந்த சமயத்தில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா உள்ளிட்ட பவுலர்கள் ரன்னை கட்டுப்படுத்தி, சில விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால், 80வது ஓவரில் பும்ரா வந்து 'மேஜிக்' நிகழ்த்தி இருக்கலாம். ஆனால், இங்கிலாந்து அணி 15 ஓவரில் 63 ரன் எடுத்து, 349/5 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. 80வது ஓவர் முடிவில், 22 ரன் மட்டுமே தேவைப்பட்டதால், பும்ரா உட்பட யார் பந்துவீசினாலும் இந்திய தோல்வியை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.


ஷர்துல் நீக்கமா: இந்தச் சூழலில் வரும் ஜூலை 2ல் பர்மிங்ஹாமில் துவங்கும் இரண்டாவது டெஸ்டில் பும்ரா இடம் பெற வாய்ப்பு குறைவு. சிராஜ் மீதான சுமை அதிகரிக்கும். அனுபவம் வாய்ந்த இவர் ரன்னை வாரி வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா ஓவருக்கு 5-6 ரன் வழங்குகின்றனர். இங்கிலாந்தில் சரியான அளவில் பந்துவீசினால் மட்டுமே ரன்னை கட்டுப்படுத்த முடியும். பர்மிங்ஹாம் போட்டிக்கு ஷர்துல் தாகூருக்கு பதில் 'சுழல்' மாயாவி குல்தீப் இடம் பெற வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் (2024) குல்தீப், 18.3-1-99-3 (எகானமி: 5.3), 3-0-26-0 (எகானமி: 8.6) என அதிக ரன் விட்டுக் கொடுத்தார்.

இது பற்றி இந்திய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' தோடா கணேஷ் கூறுகையில்,''பிரசித் கிருஷ்ணா விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர். பும்ராவை பார்த்து 'அவுட்சைடு தி ஆப்-ஸ்டம்ப்' அளவில் துல்லியமாக பந்துவீச கற்றுக் கொள்ள வேண்டும். ஷர்துல் தாகூரை நீக்கும் பட்சத்தில், குல்தீப்பிற்கு பதில் 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தருக்கு (தமிழகம்) வாய்ப்பு அளிக்கலாம். 'சுழல்' மூலம் இடது கை பேட்டரை திணறடிப்பார். சிறந்த பேட்டரான வாஷிங்டன், எந்த இடத்திலும் களமிறங்கி ரன் சேர்க்கும் திறன் பெற்றவர்,''என்றார்.


@quote@

எத்தனை அணை கட்டுவார்


இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' அஷ்வின் கூறுகையில்,''சிராஜ் விக்கெட் கூட வீழ்த்த வேண்டாம். ரன்னை கட்டுப்படுத்தினால் போதும். இவர், ஓவருக்கு 4-5 ரன் வழங்கும் போது, பும்ராவை அழைக்க வேண்டியுள்ளது. எத்தனை அணை கட்டி ரன்னை தடுப்பார் பும்ரா. முன்பு இஷாந்த் சர்மா, மார்னே மார்கல் போன்றோர் ஒரு முனையில் துல்லியமாக பந்துவீசுவர். இதே போல சிராஜும் பொறுப்பாக பந்துவீச வேண்டும்,''என்றார். quote

Advertisement