செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன் * உஸ்பெகிஸ்தான் தொடரில் அசத்தல்

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தான் தொடரில் 'டை பிரேக்கரில்' அசத்திய பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் உஸ்செஸ் கோப்பை தொடர் நடந்தது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். எட்டு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர்கள் நாடிர்பெக் (5.5), சிந்தரோவ் (5.0), பிரக்ஞானந்தா (4.5), அர்ஜுன் (4.5) முதல் 4 இடத்தில் இருந்தனர்.
9வது, கடைசி சுற்றில் அர்ஜுன்-அரவிந்த் மோதிய போட்டி 'டிரா' ஆனது. நாடிர்பெக்கிற்கு எதிரான போட்டியில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இதன் 49 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
9 சுற்று முடிவில் அர்ஜுன் (5.0), அரவிந்த் (2.5) 5, 10 வது இடம் பிடித்தனர். பிரக்ஞானந்தா, நாடிர்பெக், சிந்தரோவ் தலா 5.5 புள்ளியுடன் முதலிடம் பெற்றனர்.
'டை பிரேக்கரில்' சமன்
வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடந்தது. மூன்று வீரர்களும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோதினர். நான்கு போட்டி முடிவில் மூன்று வீரர்களும் மீண்டும் சம புள்ளி (தலா 2.0) பெற்றனர்.
இதனால், மறுபடியும் 'டை பிரேக்கர்' நடந்தது. மூவரும் தலா ஒரு முறை மோதினர். இம்முறை நாடிர்பெக்கிடம் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா, அடுத்து சிந்தரோவை வீழ்த்த, 1.5 புள்ளி பெற்றார். மறுபக்கம் சிந்தரோவ் (1.0), நாடிர்பெக்கை (0.5) வீழ்த்தினார். இதையடுத்து பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார்.

மூன்றாவது கோப்பை
உஸ்பெகிஸ்தான் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா. தவிர, 2025ல் இவர் வென்ற மூன்றாவது கோப்பை இது. முன்னதாக கிராண்ட் செஸ், டாடா ஸ்டீல் தொடரில் சாம்பியன் ஆகி இருந்தார்.

இந்தியாவின் 'நம்பர்-1' வீரர்
உஸ்பெகிஸ்தான் தொடரின் 9 வது சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 'பிடே லைவ்' தரவரிசையில் 2778.3 புள்ளியுடன் 7வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். கார்ல்சன் (நார்வே, 2839.2), நகமுரா (அமெரிக்கா, 2807.0), பேபியானோ (அமெரிக்கா, 2784.2) 'டாப்-3' ஆக உள்ளனர். அர்ஜுன் (2775.7) 3 இடம் பின்தங்கி 6வது இடம் பெற்றார். நடப்பு உலக சாம்பியன் குகேஷ் (2776.6) 5வது இடம் பிடித்துள்ளார்.
இதையடுத்து இந்திய அளவில் பிரக்ஞானந்தா, 'நம்பர்-1' வீரர் ஆனார். குகேஷ், அர்ஜுன் அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

ரூ. 17.10 லட்சம் பரிசு
உஸ்பெகிஸ்தான் தொடரில் கோப்பை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ. 17.10 லட்சம் பரிசு கிடைத்தது. அர்ஜுன் ரூ. 6 லட்சம் (5வது), அரவிந்த் ரூ. 1.7 லட்சம் (10) பெற்றனர்.

Advertisement