டிப்பர் லாரிகளால் தொடரும் விபத்துகள் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை
ஆர்.கே.பேட்டை:குவாரிகளுக்கு வரும் நுாற்றுக்கணக்கான லாரிகளால், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி சுற்றுப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து சித்துார் வரை ஆறுவழிசாலை, திருவள்ளூரில் இருந்து திருத்தணி அடுத்த பொன்பாடி, திருத்தணியில் இருந்து சித்துார் செல்லும் நெடுஞ்சாலைகளில் விரிவாக்கம் செய்யும் பணி துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர வேலுார் மாவட்டம், ரத்தினகிரி அருகேயும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் ஆந்திர மாநில எல்லைக்கு உட்பட்ட மலைகளில் செயல்பட்டு வரும் மண் குவாரிகளில் இருந்து திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான டிப்பர்களில் மண் ஏற்றி செல்லப்படுகிறது.
இதனால், இங்குள்ள கிராமங்களில், டிப்பர் லாரிகளின் இயக்கம் அதிகரித்து வருகிறது.
பள்ளிப்பட்டு வழியாக இயங்கும் டிப்பர் லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.