அகற்றாத குப்பையில் திரியும் எலிகள் வீடுகளுக்குள் நுழையும் அவலம் தேனி நகராட்சி 19வது வார்டில் சுகாதார சீர்கேடு

தேனி: தெருவில் குப்பை அகற்றப்படாமல் பல நாட்களாக தேங்குவதால் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு நிலவுகிறது. சேதமடைந்த குடிநீர் மேல்நிலை குடிநீர் தொட்டி அகற்றப்படாததால் விபத்து அபாயம் உள்ளதாக தேனி அல்லிநகரம் நகராட்சி 19 வார்டு மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த வார்டில் வ.உ.சி., தெரு, பி.டி.ராஜா தெரு, ஜவஹர் மெயின் தெரு, நரேந்திரதேவ் தெரு உள்ளிட்ட 12 தெருக்கள் உள்ளன.

சமதர்மபுரத்தில் மேடானபகுதியில் பெய்யும் மழை நீர், சாக்கடை கால்வாய் வழியே செல்ல முடியாமல் ஆக்கிரமிப்பால் கால்வாய் சுருங்கிவிட்டது.

இதனால் தெருக்களில்மழைநீருடன், கழிவுநீரும் கலந்து செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தெருக்களில் சேதமடைந்துள்ள பேவர் பிளாக் கற்களால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.

இப்பகுதி மக்கள் கூறியதாவது:

தெரு நாய்களால் இடையூறு



சாவித்திரி, தேனி: வ.உ.சி., தெரு பகுதியில் குப்பைமலைபோல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

இப்பகுதி தி.மு.க., கவுன்சிலரிடம் தெரிவித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

கவுன்சிலர் நகராட்சியில் தெரிவித்தும் பணிகள் நடக்கவில்லை. வ.உ.சி.,தெருவில் தேங்கிய குப்பையை தினமும் அகற்றிட வேண்டும். தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வாக அனைத்து நாய்களுக்கு கருத்தடைஆப்பரேஷன் செய்ய வேண்டும்.

மழைநீர் தெருவில் தேங்காமல் வடிகாலில் செல்ல கழிவுநீர் கட்டமைப்புகளைமேம்படுத்த வேண்டும்.

எலிக்காய்ச்சல் அபாயம்



சரவணவேல், ஆட்டோ டிரைவர், தேனி: எங்கள் பகுதியில் குப்பை தொடர்ந்து கொட்டி அகற்றப்படாததால் எலிகள் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது.

குப்பையில் தஞ்சமடையும் எலிகள் இரவில் வீடுகளில் புகுந்து விடுகின்றன.

இதனால் வீடுகளில் உள்ள குழந்தைகள், வயதானவர்களை கடிப்பதாலும், நீரில் அதன் எச்சம் படுவதால் எலிக்காய்ச்சல் வந்துவிடுமோ என அச்சம் உள்ளது.

இதனால் ஒரே இடத்தில் குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், அடிக்கடி நகராட்சி நிர்வாகம் சேகரமாகும் குப்பையை அகற்ற வேண்டும். கொசுக்கடி அதிகரித்துள்ளதால் நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து தெளிக்க வேண்டும்., என்றார்.

Advertisement