வைகை அணை தரைப் பாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் தரைப் பாலத்தை மூழ்கடித்துச் செல்வதால் பாலம் வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் வலது, இடது கரைகளை இணைக்க முகப்பு பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

வைகை அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தரைப்பாலத்தின் வழியாக சென்று திரும்புவர். இப்பகுதியில் நின்று போட்டோ, செல்பி எடுப்பதற்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்காக வினாடிக்கு 3900 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிக நீர் திறக்கப்பட்டதால் தரைப் பாலத்தை மூழ்கடித்து நீர் செல்கிறது. பாதுகாப்பு கருதி பாலத்தின் இரு பக்கமும் தற்காலிக முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

திறக்கப்படும் நீரின் அளவு குறைந்த பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பாலம் வழியாக சென்று வர அனுமதிக்கப்படுவர் என, நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு முறையும் நீர்திறப்பின் போது தற்காலிக தடுப்பு, முள்வேலி அமைக்கப்படுகிறது.

தரைப்பாலத்தின் இருபுறமும் நிரந்தர 'கேட்' அமைக்க வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement