பயன்பாடில்லாத குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற கோரிக்கை

படப்பை:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு, வாலாஜாபாத் அடுத்த, பழையசீவரம், மேலச்சேரி, வில்லியம்பாக்கம் பாலாறு படுகையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் வாயிலாக குடிநீர் எடுத்து வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

இந்த குழாய், ஒரகடம், செரப்பணஞ்சேரி, சாலமங்கலம், படப்பை, கரசங்கால், மண்ணிவாக்கம் வழியே வண்டலுார்- - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம் புதைக்கப்பட்டு தாம்பரத்திற்கு செல்கிறது.

இந்த குடிநீர் திட்டத்திற்காக படப்பையில் பாலாறு குடிநீர் நீரேற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடின்றி உள்ளது.

இந்த தொட்டி நெடுஞ்சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும், இந்த தொட்டி கீழே ஆக்கிரமித்து உணவகம் அமைக்கும் பணி நடக்கிறது.

இந்த தொட்டியை இடித்து அகற்றி அங்கு சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement