கூட்டுறவு சங்கங்களில் 'சிபில் ஸ்கோர்' நிபந்தனையை ரத்து செய்ய போராட்டம்

தஞ்சாவூர்: தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களில் நகை மற்றும் பயிர் கடன் பெற, சிபில் ஸ்கோர், அவசியமாக பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கு, விவசாயிகள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும், அரசு தரப்பில், சிபில் ஸ்கோர் தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், ஒரு சில கூட்டுறவு சங்கங்களில், சிபில் ஸ்கோர் சான்றிதழ் கேட்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது, சிபில் ஸ்கோர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விவசாயிகள் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தின் முன் கோஷமிட்டனர்.

மேலும், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையிலான விவசாயிகள், நகை மற்றும் விவசாய கடன்கள் வழங்க, கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கழுத்து மற்றும் காதுகளில் நகைகளை அணிந்து நுாதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது தமிழ் பல்கலைக்கழக எஸ்.ஐ., விஷ்ணு பிரசாத் விவசாயிகளை ஒருமையில், தரக்குறைவாக பேசி தாக்க முயன்றார். பின்னர், அங்கிருந்த போலீசார் அனைவரும் சமாதானம் செய்தனர். இதையடுத்து விவசாயிகள் அணிந்து இருந்த நகைகளை கழட்டி விட்டு, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Advertisement