மழை,வெயிலில் மக்கி போன மாற்றுத்திறனாளிகள் சைக்கிள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் சட்டசபை எம்.எல்.ஏ.,வும், உயர்கல்வித்துறை அமைச்சருமான செழியன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர சைக்கிள் சமீபத்தில் வழங்கப்பட்டது.

இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளி சைக்கிள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்காமல், பந்தநல்லுார் மாரியம்மன்கோவில் வளாகத்தில், சைக்கிள்களில் செடிகள் வளர்ந்தும், மழை மற்றும் வெயிலில் கிடந்தும் துருப்பிடித்து கிடக்கிறது. இதை பார்த்த மாற்றுத்திறனாளிகள் மிகுந்த வேதனையுடன் சென்றனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் பலரும் மூன்று சைக்கிள் கேட்டு, கலெக்டர், மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மனு அளித்து காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியனால் எம்.எல்.ஏ.,வின் தொகுதி மேம்பாட்டு நிதியில், பல மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் மிச்சம் உள்ள சைக்கிளை பாதுகாப்பாக வைக்காமல், குப்பை போல போட்டதால், யாருக்கும் பயன் இல்லாமல், துருப்பிடித்து மக்கி உள்ளது. இதில் மக்கள் வரிப்பணம் தான் வீணாகியுள்ளது. உடனே, மாற்றுத்திறனாளி நல அலுவலக துறையினர் நடவடிக்கை எடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து மாற்றுத்திறனாளி அலுவலர்கள் கூறியதாவது: எம்.எல்.ஏ.,விடம் பேசி, மாற்றுத்திறனாளி சைக்கிள்களை சீரமைத்து, பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement