திருப்போரூர் சார்--பதிவாளர் அலுவலகத்தை பிரிக்கும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்:திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை பிரிப்பதில் ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து, அனைத்து கட்சியினர் நேற்று, திருப்போரூரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தெற்கு மாடவீதியில், சார் -- பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

கூட்ட நெரிசல், இட நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்ததால், இந்த அலுவலகத்தை வேறு இடத்திற்கு இடம் மாற்ற ஆய்வு செய்யப்பட்டது.

இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலுார், வண்டலுார் ஆகிய நான்கு அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

புதிய அலுவலகங்கள் இடம்பெறும் கிராமங்கள் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், பல கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அ.தி.மு.க., -- பா.ம.க., புரட்சி பாரதம், வி.சி.க., என அனைத்து கட்சிகளின் சார்பில், கடந்த மார்ச் 17ம் தேதி, பொதுமக்களிடம் கருத்து கேட்டு, திருப்போரூர் சார் - பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இம்மனு மீது நடவடிக்கை எடுக்காததால், அனைத்துகட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு திருப்போரூர் போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்றனர்.

இதையடுத்து நேற்று, திருப்போரூர் சார்- - பதிவாளர் அலுவலகம் அருகே அ.தி.மு.க., - -பா.ம.க., கம்யூனிஸ்ட், புரட்சி பாரதம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் கிராமங்களை இணைப்பதில் குளறுபடி உள்ளது.

பல கிராமங்கள் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்துடன் தேவையின்றி சேர்க்கப்படுவதாகவும் கூறி கோஷம் எழுப்பினர்.

திருப்போரூரில் ஒருங்கிணைந்த சார் - பதிவாளர் அலுவலகம் உருவாக்கவும், ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement