பழவேற்காடு பாலத்தில் சேதமான மின் கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

பழவேற்காடு:பழவேற்காடு பாலத்தில் கம்பங்கள் மற்றும் மின்விளக்குகள் சேதம் அடைந்துள்ளதால், அவற்றை சீரமைக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பழவேற்காடு கடற்கரையையொட்டி, அரங்கம், திருமலைநகர், லைட்அவுஸ்குப்பம் என, 15 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன.

இங்குள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு, பழவேற்காடு ஏரியின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தை கடந்து, பழவேற்காடு பஜார் பகுதிக்கும், வெளியிடங்களுக்கும் சென்று வருகின்றனர்.

இந்த பாலம் கட்டப்பட்டு 14ஆண்டுகள் ஆகிறது. பாலம் அமைத்தபோது, மின்விளக்கிற்காக இருபுறமும் கம்பங்கள் அமைக்கப்பட்டன.

பாலம் அமைந்த ஓரிரு ஆண்டுகள் மட்டுமே, மின்விளக்குகள் எரிந்தன. அதன்பின் அவை எரியாமல் பாலம் இருண்டது.

மின்விளக்கு கம்பங்கள் உப்பு காற்றில் சிதைந்து, ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்தன.

இவை உடைந்து விழுந்து, நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை சீரமைக்கவில்லை. பாலத்தில் மின்விளக்கு வசதியில்லாமல், மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில், பழவேற்காடு பஜார் பகுதிக்கு வந்து செல்லும் மீனவ பெண்கள், அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

லைட்அவுஸ்குப்பம், பழவேற்காடு ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் இந்த பாலம் இருப்பதால், மின்விளக்குகளை யார் பராமரிப்பது என்ற நிலை உள்ளது.

இரவு நேரங்களில் இருண்டு கிடக்கும் பாலத்திற்கு எப்போதுதான் விமோசனம் கிடைக்கும் என, மீனவர்கள் காத்திருப்பதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement