மதுரையில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ரூ.40 லட்சம் மோசடி இளைஞரை கடத்திய 4 பேர் கும்பல் கைது

மதுரை: மதுரையில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியவருக்கு பதில் அவரது தம்பியை கடத்திச் சென்ற 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மதுரை விளாங்குடியை சேர்ந்தவர்கள் வெள்ளைப்பாண்டி, முரளி மணிகண்டன். இருவரும் இணைந்து ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி வந்துள்ளனர். இவர்களை நம்பி திருச்சி சசிகுமார், தேவராஜ் ஆன்லைன் டிரேடிங் செய்துள்ளனர். இவர்கள் வெள்ளைப்பாண்டி, முரளி மணிகண்டனிடம் ரூ.4 லட்சம் கொடுத்தனர். ஆனால் பணத்தை இரட்டிப்பு செய்துதரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார், தேவராஜ், நண்பர்கள் விஜய்,விக்னேஷ், பிரதாப் ஆகிய 5 பேரும் வெள்ளைப்பாண்டியை சந்திக்க மதுரை வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவர் தலைமறைவானார். இதனால் அவருக்கு பதில் அவருடைய தம்பி ரத்னவேல்பாண்டியை விளாங்குடி பகுதியில் வரும்போது காரில் கடத்தி சென்றனர்.

பின் 'உன் தம்பி உயிரோடு வேண்டுமென்றால் நான் கொடுத்த ரூ. 4 லட்சத்தை திரும்ப தர வேண்டும்' என வெள்ளைப்பாண்டி தரப்புக்கு மிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பாக கூடல்புதுார் போலீசில் அவர் புகார் அளித்தார்.

விசாரணையில் இறங்கிய போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களை 4 மணிநேரத்தில் கண்டுபிடித்து ரத்னவேல் பாண்டியனை மீட்டனர். இதுகுறித்து விளாங்குடி பகுதியில் காரில் கடத்தி சென்ற போது அந்த கும்பலை பிடித்தனர்.

இதில் சசிக்குமார், விஜய், விக்னேஷ் தேவராஜ் ஆகியோரை கைது செய்தனர். பிரதாப் தப்பினார். அவரை தனிப்படை போலீசார் தேடுகின்றனர். இதில் போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.

Advertisement