கோவை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவை; கோவை மாநகராட்சி சார்பில், 16 இடங்களில் உள்விளையாட்டு அரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றை பயன்படுத்த இதுவரை கட்டணம் வசூலிக்கவில்லை. தற்போது அவற்றை பராமரிக்கும் பொறுப்பை, பொது ஏல முறையில் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

விளையாட்டு அரங்கத்துக்கு வருவோரிடம் மாதந்தோறும், 75 ரூபாய் கட்டணம் வசூலிக்க, நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தனர்.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் முற்றியது. அச்சமயத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவரும் மேயரின் இருக்கைக்கு முன் நின்று, குரல் எழுப்பினர். அவர்களை தி.மு.க., கவுன்சிலர்கள் சுற்றி நின்று, மன்றத்தில் இருந்து வெளியேற்றினர்.

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவரும், மன்ற நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி, இரு கூட்டங்களுக்கு 'சஸ்பெண்ட்' செய்வதாக, மேயர் ரங்கநாயகி அறிவித்தார்.

Advertisement