தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்; மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு

கூடலுார்; கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை அருகே மரம் விழுந்து, மூன்று மாநிலங்கள் இடையே, இரண்டு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசிவருவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருகின்றன.

இந்நிலையில், கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை அருகே, நேற்று காலை, 6:30 மணிக்கு பெரியளவிலான மரம் விழுந்தது. இதனால், ஊட்டியில் இருந்து, கூடலுார், கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும், மூன்று மாநில அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், நடுவட்டம் பேரூராட்சி மீட்பு குழுவினர், தேசிய நெடுஞ்சாலை துறையினர் வந்து, மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து, 8:30 மணிக்கு வாகன போக்குவரத்து சீரானது.

Advertisement