சுற்றுலா பயணியிடம் போலீஸ் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார்; விசாரணை நடத்துவதாக எஸ்.பி., தகவல்

கூடலுார்; கூடலுாரில் சுற்றுலா பயணியிடம் போலீஸ் லஞ்சம் வாங்குவது போன்ற,'வீடியோ' வைரலான நிலையில், 'உரிய விசாரணை நடத்தப்படும்,' என, எஸ்.பி., கூறினார்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் வழியாக சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரும் போது, வாகனங்களை போலீசார் சோதனை செய்து, விதிமீறும் மற்றும் ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணி ஒருவரிடம், சாலையில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்குவது தொடர்பான 'வீடியோ' நேற்று சமூக வலை தலங்களில் வெளியாகி, போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், 'குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி வாகனத்தில் அமர்ந்து கொண்டு, சுற்றுலா பயணிடம் லஞ்சம் பெறுவது,' போன்ற காட்சி பதிவாகி உள்ளது.

அவர் யார் என்று விவரம் வெளியிடப்படவில்லை. நீலகிரி எஸ்.பி., நிஷா கூறுகையில்,''வீடியோ குறித்த தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்,'' என்றார்.

Advertisement