மனைப்பிரிவில் மின்சார இணைப்புக்கு கம்பம் அமைப்பதில் கவனிக்க வேண்டியவை!

புதிதாக மனைப்பிரிவு திட்டங்களில் நிலம் வாங்க வேண்டும் என்ற விரும்புவோர் அது சார்ந்த பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய மனைப்பிரிவு திட்டங்களை அறிவிக்கும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில்போதிய திட்டமிடல் இருப்பதுஇல்லை.
இதனால், அத்திட்டங்களில் நிலம் வாங்கியவர்கள் அதில் வீடு கட்டும் போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு பகுதியில் புதிய மனைப்பிரிவு திட்டத்தை அறிவிக்கும் போது அங்கு, சாலைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால், மின்சார இணைப்புக்கான வழித்தடம் ஆகிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சில ஆண்டுகள் முன்பு வரை மனைப்பிரிவு திட்டங்களை அறிவிக்கும் நிறுவனங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான விஷயங்களில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்தன. இதனால், நிலத்தை பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்துவிட்டு சென்றுவிடுவர்.
அதில் மனை வாங்கியவர்களில் சிலர், பல ஆண்டுகள் கழித்து அதில் வீடு கட்ட இறங்கும் போது தான் மின்சார இணைப்புக்கான வசதிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, வீடு கட்டுவோர் மின்சார இணைப்பு பெற அணுகினால், அவரது நிலம் வரை மின்சார கம்பம் அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதில், மின்சார வாரியம் தானாக கம்பங்கள் அமைத்து மின்சார இணைப்பு கொடுப்பதில் இறங்காது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் பல முறை அதிகாரிகளை அணுகி கெஞ்சினால் மட்டுமே வேலை நடக்கும். அப்போதும், உங்களுக்காக தான் புதிய கம்பம் அமைக்க வேண்டியுள்ளது அதற்கான செலவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பர்.
இவ்வாறு புதிய மின்சார இணைப்பு பெற விண்ணப்பிக்கும் நபர்கள், அதற்கான கம்பம் போன்ற விஷயங்களுக்கான செலவை ஏற்க வேண்டியதில்லை. இது விஷயத்தில் தற்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், அதிகாரிகள் கொஞ்சம் அடக்கி வாசிக்க துவங்கியுள்ளனர்.
இருப்பினும், பெருநகரங்களில் மின்சார இணைப்பு விஷயத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் வைத்து உரிமையாளர்கள் செயல்பட வேண்டும். இதில், ரியல் எஸ்டேட் நிறுவனம் செலுத்திய கட்டணம் அடிப்படையில் மின்சார வாரியம் புதிய கம்பங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்.
இதன்படி, புதிதாக மின்சார இணைப்புக்கு கம்பங்கள் அமைக்கும்போது, உங்கள் மனையின் வாயில் பகுதியில் கம்பம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கான மனையில் வாயில் கேட் எங்கு அமைக்க போகிறீர்கள்என்பதை கருத்தில் வைத்து இதை அணுக வேண்டும்.
இதைவிட நிலத்தடி புதைவட முறையில் மின்சார இணைப்பு அளிக்கும்படி உரிமையாளர்கள் கேட்கலாம். பெரும்பாலான நகரங்கள் இந்த வழிமுறைக்கு மாறியுள்ள நிலையில், புதிய மனைப்பிரிவுகளில் புதைவட முறையில் மின்சார இணைப்புக்கு கட்டமைப்புகளை ஏற்படுத்துவது நல்லது.
புதிதாக மனை வாங்குவோர் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் வாயிலாக இந்த கோரிக்கையை வலியுறுத்தினால்,பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.
மேலும்
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது