பட்டும் திருந்தாத பாகிஸ்தான்: இந்தியா தாக்கி அழித்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் அமைப்பது கண்டுபிடிப்பு

13

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் முகாம்களை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டமைக்க தொடங்கியிருப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம், 100 பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. இந்தத் தாக்குதலில், விமான கடத்தல், புல்வாமா வெடிகுண்டு தாக்குதல் போன்ற பயங்கரவாத சம்பவங்களுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட யூசுப் அசார், அப்துல் ரவூப், முதாசிர் அகமது ஆகியோரும் கொல்லப்பட்டனர்.


இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய எல்லைகள் மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. மேலும், பாகிஸ்தானுக்குள் நுழைந்து அந்நாட்டின் விமானப்படை தளங்களை இந்திய விமானப் படை சேதப்படுத்தியது.


பயங்கரவாத முகாம்களை தவிர, பாகிஸ்தான் அரசின் வேறு எந்த கட்டமைப்பையும் நாம் தாக்கவில்லை என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த ஆபரேஷனின் போது தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களின் செயற்கைகோள் படங்களை ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதையும், பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக உலக நாடுகளிடையே இந்தியா எடுத்துரைத்து வருகிறது.


இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள், ஆயுத ஏவுதளங்களை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டமைக்க தொடங்கி இருப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறையும் இணைந்து இந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement