70 வயது பெண் மருத்துவரிடம் சைபர் குற்றவாளிகள் ரூ.3 கோடி மோசடி

மும்பை: 70 வயது பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை மும்பை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

மஹாராஷ்டிராவில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்கி 8 நாட்கள் டிஜிட்டல் கைதாகி, ரூ.3 கோடியை இழந்த 70 வயது மருத்துவர், கடந்த ஜூன் 5 ஆம் தேதி, மும்பை மேற்கு பிராந்திய சைபர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

என் மொபைல் போன் எண்ணிற்கு, கடந்த மே மாதத்தில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர் தொலை தொடர்பு துறை ஊழியர் அமித் குமார் என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு சிம் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அந்த சிம் கார்டு எண்ணில் வீடியோ அழைப்பில் மற்றொருவர், தான் குற்றப்பிரிவு அதிகாரி சமதன் பவார் என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் என் கணவரிடம் சமீபத்தில் ஒரு விமான நிறுவன உரிமையாளர் வீட்டில் சோதனை செய்து, அவரது வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மிரட்டி உள்ளார். உங்களிடம் சோதனை நடத்த வேண்டியிருக்கிறது என்று மிரட்டப்பட்டோம். மேலும் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சீருடையில் தோன்றியவர் கூறினார். சி.பி.ஐ., அமலாக்க இயக்குநரகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

பயந்து போன நாங்கள், அவர்கள் அளித்த பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.3 கோடி வரையிலான பணத்தை மாற்றினோம். இவ்வாறு நாங்கள் 8 நாட்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தோம். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த மோசடி புகார் குறித்து மும்பை போலீசார் கூறியதாவது:

புகாரின் அடிப்படையில் நாங்கள் நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ.82 லட்சத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றியது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் அவர்களைக் கண்டுபிடித்து இழந்த பணத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் பிடித்து கைது செய்வோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement