ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால் தமிழகம் சுடுகாடாகும்: நாகேந்திரன்

1

திருநெல்வேலி : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:


தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சிதைக்க தி.மு.க.,வினர் என்னென்னவோ செய்கின்றனர். அவர்கள் என்ன செய்தாலும், எங்கள் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முடியாது.


எங்கள் கூட்டணியை நோக்கி கேள்விகளை எழுப்பும் தி.மு.க., தரப்பு, முதல்வரிடம் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் பெற்று தர வேண்டும்.


கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இம்முறை எத்தனை சீட் தருவீர்கள் என்று மட்டும் கேட்டு சொல்ல வேண்டும்.



தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதோடு, கூட்டணி ஆட்சியில் பா.ஜ., அங்கம் வகிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லி இருக்கிறார். இதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.


ஆனால், தி.மு.க., கூட்டணியில் முரண்பாடுகள் இருக்கிறதா, இல்லையா என்பதை வி.சி., திருமாவளவனும், மார்க்சிஸ்ட் கம்யூ., சண்முகமும் சொல்லட்டும்.


பா.ம.க., குழப்பத்துக்கு தி.மு.க., தான் பின்னணியில் இருக்கிறது என்பதை அன்புமணி சொன்னால், தி.மு.க.,வினருக்கு கோபம் வருகிறது.


உண்மையிலேயே, தி.மு.க., பின்னணியில் இல்லை என்றால், பா.ம.க., நிறுவனர் ராமதாஸை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எந்த அடிப்படையில் போய் பார்த்தார்?


தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பாதிப்புகளால் ஏற்பட்டிருக்கும் விரக்தியை, அப்படியே தேர்தலில் காட்ட வேண்டும்.


அப்படி செய்தால் தான், ஆட்சி மாற்றம் ஏற்படும்; தமிழக மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும். இல்லையென்றால், சுடுகாடுதான்.


தமிழகம் முழுதும் தினந்தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், தங்கு தடையில்லாமல் நடக்கின்றன.


ஆனால், திராவிட மாடல் அரசு: ஆன்மிக அரசு என்று, அமைச்சர் சேகர்பாபு போன்றோர், தங்களை தாங்களே பாராட்டிக்கொண்டு, முக்கிய பிரச்னைகள் குறித்து பேசாமல் மடைமாற்றம் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement