இந்திய விஞ்ஞானிகளின் திறமை; மத்திய அமைச்சர் குமாரசாமி பெருமிதம்

பெங்களூரு : ''இந்திய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமையை உலகம் அறிந்துள்ளது,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி பெருமிதம் தெரிவித்தார்.

பெங்களூரின் துமகூரு சாலையில் உள்ள மத்திய தொழில்நுட்ப உற்பத்தி மையத்தின் 64ம் ஆண்டு நிறுவன விழாவை, மத்திய அமைச்சர் குமாரசாமி, நேற்று துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பல விஷயங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருந்தோம். இப்போது நிலைமை மாறிவிட்டது. அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

'மேக் இன் இந்தியா', 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டங்கள் மூலம், பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான பல ஆயுதங்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இன்று பாதுகாப்பு துறையில், சக்தி வாய்ந்த மற்றும் பலமான நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையும், நம் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுமே இதற்கு காரணம்.

திறமையான இளைஞர்கள், பெண்களின் கடின உழைப்பால், நம் நாட்டில் தயாரிக்கப்படும் போர் உபகரணங்கள், உலகின் வேறு எந்த நாட்டையும் விட குறைவானவை அல்ல. உங்களை போன்று அனைவரின் கடின உழைப்பின் காரணமாக, ஆயுதங்களை உருவாக்க முடிகிறது.

பிரதமர் மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த 'ஆப்பரேஷன் சிந்துார்', நம் ஆயுதங்களின் சக்தி என்ன என்பதை உலகிற்கு காட்டி உள்ளது.

செமிகண்டக்டர் துறையில், இந்திய அறிவியல் நிறுவனம், பெரியளவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவுக்கு பெங்களூரு மிகவும் ஏற்ற இடமாகும்.

இந்திய அரசின் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம், மதிப்புமிக்கதாகும். பாதுகாப்பு, இடம் உட்பட பல்வேறு தொழில்களின் தேவைளுக்கு ஏற்ப இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

தேசத்தை கட்டி எழுப்ப இங்கு ஏராளமான இளம் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement