மத்திய சிறையில் காலி பணியிடம் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

கடலுார் : கடலுார் மத்திய சிறையில் காலியாக உள்ள சமூக இயல் வல்லுநர் மற்றும் மனநல ஆலோசகர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கடலுார் மத்திய சிறையில் காலியாக உள்ள சமூக இயல் வல்லுநர் மற்றும் மனநல ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சமூக இயல் வல்லுநர் பணிக்கு, சமூக பணி சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், வளர் பருவக் கல்வி ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றியிருக்க வேண்டும்.

அல்லது சமூகப்பணி சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல் சமூகவியல் ஆகிய பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது பட்டயப்படிப்புபடித்தவராக இருக்க வேண்டும்.மனநல ஆலோசகர் பணிக்கு சமூகவியல், உளவியல், சமூகப்பணி பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் மனநல நிறுவனங்கள் அல்லது சமூக சேவையில் ஆலோசனை வழங்கிய அனுபவங்கள் இருக்க வேண்டும்.

மதிப்பூதியம் அடிப்படையில் சமூக இயல் வல்லுநருக்கு மாதம் ரூ.15,000, மனநல ஆலோசகர் பணிக்கு ரூ.25,000 மாதம் ஊதியம் வழங்கப்படும்.பொதுப்போட்டி இனப்பிரிவை சார்ந்தவர்கள் 01.01.2025ல் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மற்ற பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். தகுதியானவர்கள்பதவியின் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, இனம், உட்பிரிவு, முகவரி, பணி அனுபவ சான்று ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து புகைப்படம் மற்றும் உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கடலுார் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக வரும் 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Advertisement