பிரபல கட்டுமான நிறுவனங்களின் பெயரில் போலி விளம்பரம் செய்து பல கோடி மோசடி பீஹாரில் 5 பேரை சுற்றிவளைத்தது புதுச்சேரி போலீஸ்

புதுச்சேரி:கட்டுமான நிறுவனங்களின் பெயரில், போலியாக விளம்பரம் வெளியிட்டு, நாடு முழுதும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரை, புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த சேதுராமன், 2024 ஆகஸ்டில் சமூக வலைதளத்தில், 'வைசாக் ஸ்டீல்' என்ற நிறுவனத்தின் பெயரில், 10 சதவீதம் குறைவாக டி.எம்.டி., கம்பி உள்ளிட்ட பொருட்களை தருகிறோம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.

அதில், நிறுவனத்தின் பெயரிலேயே ஜி.எஸ்.டி., எண் மற்றும் வங்கி கணக்குகள் இருந்ததால், சேதுராமன், 30 லட்சத்து 97,000 ரூபாய் செலுத்தி பொருட்கள் ஆர்டர் செய்தார். பொருட்கள் வரவில்லை.

புகாரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அது போலி விளம்பரம் என, தெரியவந்தது.

தனிப்படை போலீசார், பீஹார் தலைநகர் பாட்னாவில் பதுங்கி இருந்த மஹாராஷ்டிராவை சேர்ந்த ராகுல்குமார் சிங், 30, பீஹார் மாநிலத்தை சேர்ந்த உத்தம் விஷால் குமார், 24, ராயுஷன் குமார், 24, அபிஷேக் குமார், 27, பெங்களூரை சேர்ந்த தயாந்த், 30, ஆகியோரை, ஜூன் 20ல் கைது செய்தனர்.

அவர்களிடம், 34 லட்சம் ரூபாய், 40 மொபைல் போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களை புதுச்சேரி அழைத்து வந்து, விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த கும்பல் நாடு முழுதும், 2019 முதல் பல்வேறு கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பெயரில், போலியாக விளம்பரப்படுத்தி, ஆயிரக்கணக்கான நபர்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதற்கு பல்வேறு குழுக்கள் அமைத்து, ஒவ்வொரு குழுவிலும், 20க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வந்ததுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.

டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது, இந்தியா முழுதும், 52 புகார்கள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. ஆறு மாதங்களில் மட்டும், 32 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து, 20 டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தாங்கள் உபயோகப்படுத்திய அனைத்து பொருட்களையும் அழித்து விடுவதால், பழைய தகவல்களை திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த கும்பல் எந்த மாநில போலீசாரிடமும், இதற்கு முன் சிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., பிரவீன் குமார் திரிப்பாதி, எஸ்.பி., பாஸ்கரன் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement