பைக் - கன்டெய்னர் மோதல் தம்பதி பரிதாப மரணம்

வேலுார்:உத்தர பிரதேச மாநிலம், கங்காபோரை சேர்ந்தவர் ஆகாஷ் யாதவ், 20. சென்னை துறைமுகத்தில் இருந்து தலா, 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள, இரு கார்களை கன்டெய்னர் லாரியில் ஏற்றி பெங்களூரு சென்றார். நேற்று காலை, வேலுார் மாவட்டம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொய்கை அருகே சென்று கொண்டிருந்தார்.

எதிரே, சூராங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ேஹாட்டல் தொழிலாளிகளான ரமேஷ், 43, அவர் மனைவி கோமதி, 36, ஆகியோர், டி.வி.எஸ்., பைக்கில், வேலுார் சென்று கொண்டிருந்தனர். அப்போது கன்டெய்னர் லாரி மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி, நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் சிக்கியது. ‍அப்போது, மேலே சென்ற மின்கம்பி உரசியதில், கன்டெய்னர் லாரி தீப்பிடித்தது. வேலுார் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

கன்டெய்னர் முன்பகுதி எரிந்து நாசமானது. உள்ளேயிருந்த சொகுசு கார், டிரைவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

விரிஞ்சிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement